திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!
சென்னை: திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த தமிமுன் அன்சாரி, 5 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளோம், அது எந்த தொகுதி என்பது நாளை தெரியும்.. நாளைக்கும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர் என்று கூறினார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்திற்கும் தொகுதி உடன்பாடு முடிந்து விட்டது. முதல் முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஏனென்றால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் தவிர மற்ற கட்சிகளுக்கு ஒரு சீட்டு குறைவாகவே ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட அதே எண்ணிக்கையாவது இந்த தேர்தலில் ஒதுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் பல நாட்களாக மல்லு கட்டின. ஆனால் இந்த இரண்டு கட்சிகளுக்குமே கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவாகவே ஒதுக்கியது திமுக.
இதேபோன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் தலா 1 தொகுதி குறைத்து தான் கொடுக்கப்பட்டது. மதிமுக பல நாட்களாக மல்லு கட்டியும் கடைசியில் 2 தொகுதிகள் குறைவாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் மீதமுள்ள சிறிய கட்சிகளுக்கும் இன்று திமுக தொகுதி பங்கீட்டினை நிறைவு செய்துள்ளது. இதன்படி தமிமுன் அன்சாரியின், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, திமுக கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது எந்த தொகுதி என்பது நாளை முடிவாகும். மொத்தம் 5 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளோம். அது எந்த தொகுதி என்பது நாளை தெரியும்.. நாளைக்கும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.. இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.. நம்பிக்கை ஊட்டும் விதமாக இருந்தது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications