விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசு.. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுவதா - ஸ்டாலின் பொளேர்
விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.போராட்டம் நடத்தி வருபவர்களை மத்திய அரசு தேச விரோதிகள் என்று கூறி வருகிறது. மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை, புதுச்சேரியில் திமுக, தோழமைக் கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக 144 தடை உத்தரவை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் திமுக, தோழமைக் கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்
உண்ணாவிரதப்போராட்டத்தை தொடக்கி வைத்து பேசிய மு.க. ஸ்டாலின், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு ஒட்டுமொத்த மக்களுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. அந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வற்புறுத்தி - கோரிக்கையை வைத்து தலைநகர் டெல்லியில், இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள் குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றுதிரண்டு, மிகப்பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் என்றார்.
உண்ணா நோன்பு
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, இன்றோடு 23 நாட்கள் தொடர்ந்து அந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அந்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, தமிழகத்தின் சார்பில் நாமும் நம்முடைய ஆதரவைத் தெரிவித்திட வேண்டும் என்று முடிவு செய்து தொடர்ந்து நாம் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தாலும், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் உண்ணா நோன்பு என்கிற அறப்போராட்டத்தை அறிவித்து, நாம் இன்று நடத்தவிருக்கிறோம்.
மக்களைப்பற்றி கவலையில்லை
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா என்ற நோய்த் தொற்றில் இந்தியா முழுவதும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், அதைப்பற்றி மத்திய பா.ஜ.க. அரசும் மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் சிந்தித்துப் பார்க்காமல், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், சுகாதாரப் பணியில் பொருளாதார உதவியில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், தாங்கள் போகிற போக்கில் மக்களுக்கு எதிரான உணர்வுகளை எண்ணங்களை - சட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நான்கு சட்டங்கள்
அதிலும் குறிப்பாக, கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு மக்கள் விரோதச் சட்டங்களை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மூன்று வேளாண் சட்டங்கள், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை, புதிய மின்சார திருத்தச் சட்டம். இந்த நான்கு சட்டங்களும் மக்களுக்கு விரோதமான சட்டங்கள் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.
மத்திய அரசு கண்மூடித்தனம்
மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் துணை நிற்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு கண்மூடித்தனமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக இந்தியாவே இன்று கொந்தளித்துப் போய் இருக்கிறது.
குளிரில் கொதிக்கும் டெல்லி
தலைநகர் டெல்லி இன்று கொதித்துப் போய் இருக்கிறது. வட மாநிலங்களில் இருக்கும் விவசாயிகளெல்லாம் கும்பல் கும்பலாக - குடும்பம் குடும்பமாகத் தலைநகர் டெல்லியை நோக்கி வருகை தந்து அங்கேயே தங்கி கடுமையான குளிரைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல், அங்கேயே உறங்கி, அங்கேயே சமைத்து உணர்வுபூர்வமான ஒரு போராட்டத்தை விவசாயப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வேளாண் சட்டங்களால் பாதிப்பு
இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயத்தைப் பாழடிக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்க்கையைச் சிதைக்கும் வகையிலும் அமைந்திருப்பதால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முன்பு விவசாயிகளை அழைத்துப் பேசியிருக்க வேண்டும்; விவசாயச் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அல்லது இதுகுறித்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் விவாதத்தை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், இது எதையும் இந்த மத்திய அரசு செய்திடவில்லை.
மத்திய அரசு நாடகம்
எதற்காக இவ்வளவு அவசரம்; யாரைப் பாதுகாக்க இந்தச் சட்டத்தை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்? இதை மக்கள் மன்றத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டும். மத்திய அரசு பேச்சுவார்த்தை என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். இந்த மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளின் பிரச்சினை
தங்களுடைய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக - வாழ்க்கைப் பிரச்சினையாக இதைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். தினமும் அவர்கள் டெல்லியை நோக்கி வரும் காட்சிகளை நாம் ஊடகங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு அதை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனைக் கண்டிக்கும் வகையில் தான் நாம் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
விவசாயிகள் தீவிரவாதிகளா?
அதுமட்டுமல்ல போராடக் கூடியவர்களை மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால், தேசவிரோதிகள் - அந்நியக் கைக்கூலிகள் என்று சொல்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்துகிறார்கள். தீவிரவாதிகள் என்று விமர்சிக்கிறார்கள். இப்படிப்பட்ட முத்திரை குத்தி கொச்சைப்படுத்தக் கூடிய சூழ்நிலையைத் தான் நாம் என்று இந்த உண்ணாநிலைப் போராட்டத்தின் மூலமாகக் கண்டித்துக் கொண்டிருக்கிறோம்.
தொடர் போராட்டங்கள்
வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதால் எவ்விதப் பயனும் இல்லை. ஆகவே அவற்றைத் திரும்பப் பெற வேண்டும். அதுதான் விவசாயிகளுடைய கோரிக்கை; நம்முடைய கோரிக்கை; மக்களுடைய கோரிக்கை என்பதையும் எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறுகிற வரையில் நம்முடைய போராட்டங்கள் தொடரும்; வேறு கட்டங்களில் அவற்றை முடிவு செய்து அறிவித்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.
மவுன அஞ்சலி
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களைச் சேர்ந்த நம்முடைய தோழர்கள் இதுவரையில் 21 பேர் அதிர்ச்சியிலும் தற்கொலை செய்து கொண்டும் மாண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்திய அளவில் இருக்கக்கூடிய விவசாய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வருகிற 20-ஆம் தேதி அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளனர். இன்று நாம் இந்தப் போராட்டத்தை நடத்துகின்ற காரணத்தால், நாமும் அதில் பங்கேற்றிட வேண்டும். அனைவரும் அமைதியாக எழுந்து நின்று 2 நிமிடம் மறைந்த அந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.