நீட்.. "எல்லாத்துக்கும் காரணம் ஸ்டாலின்தானா?".. பாயும் கட்சிகள்.. ஆனால் செய்ய வேண்டியது இதுதான்!
நீட் விவகாரத்துக்கு திமுகதான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது
சென்னை: "இது எல்லாத்துக்கும் காரணம் ஸ்டாலின்தானா? நீட் தேர்வு இந்த அளவுக்கு விவகாரமாக வெடித்துள்ளதும் திமுகவால்தானா? என்ற அழுத்தமான அலசல்கள் தமிழக அரசியல் களத்தை வலம் வந்து கொண்டிருக்கின்றன.
நீட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், "மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்த 2010-ம் ஆண்டில்தான் இந்த நீட் தேர்வு குறித்த நோட்டிபிகேஷன் விடப்பட்டது.
இதுக்கு காரணமே காங்கிரசும் திமுகவும்தான்... மக்களிடம் எதிர்ப்பு வந்தவுடன் அந்த பழியை எங்கள் மீது சுமத்துவதற்காக குற்றச்சாட்டை திசை திருப்பிவிடுகின்றனர்" என்றார்.

திமுக
இதற்கு ஸ்டாலின், "திமுக ஆட்சி அமைந்ததும் நீட் ரத்து செய்யப்படும்.. வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும். எந்தப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும்... இது உறுதி" என்று சொல்லவும், வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கக் வேண்டியது அதிமுகதான்.. மாறாக, பாஜக பாய்ந்து வந்து எதிர்ப்பு சொன்னது.

சுப்ரீம் கோர்ட்
"திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம்" என்று ஸ்டாலின் சொல்வது சுப்ரீம் கோர்ட்டையே அவமதிக்கும் செயல், அவரது வழக்கறிஞர்கள் இதை ஸ்டாலினுக்கு எடுத்து சொல்ல வேண்டும்" என்று பாஜக துணைத்தலைவர் விபி துரைசாமி கூறியுள்ளார். இதற்கு நடுவில், ""மாணவர்களின் சென்டிமென்ட்டை தவறாக திசை திருப்புகிறார்கள்... சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடக்கிறது... எல்லா விஷயங்களிலும் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்" என்று எல்.முருகன் சாடினார்.
இப்படி ஆளாளுக்கு ஒருவர் மீது ஒருவர் பழிகளை சொல்லி கொண்டே இருக்கிறார்களே தவிர, இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை யாரும் சொல்லவில்லை.

ஸ்டாலின்
உண்மையிலேயே திமுகதான் இந்த நீட் விவகாரத்துக்கு காரணமா? அப்படி முழு பழியையும் அந்த கட்சி மீது ஒரேயடியாக திணித்துவிட முடியாது.. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுக இருந்தாலும், நீட் தேர்வை முதலில் எதிர்த்தது, அப்போதைய முதல்வர் கருணாநிதிதான்.. உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு ஒரு லெட்டரும் எழுதி எதிர்ப்பும் சொன்னார்.. மேலும் சென்னை ஹைகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்து நீட் தேர்வுக்கு தடையும் பெற்றார்.

நியாயமா?
அதை விட முக்கியமாக கருணாநிதி முதல்வராக இருந்தவரை நீட் உள்ளே வரவே விடவில்லை.. அதனால், திமுகவை குற்றஞ்சாட்டும் சரியானதாக தெரியவில்லை... ஐமு கூட்டணி அரசு இருந்தபோதே நீட் தேர்வை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து விட்ட பிறகும், திமுகவை இப்போதும் வம்பிழுத்து குற்றஞ்சாட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

பாஜக
இதேதான் ஜெயலலிதாவும்.. அவர் உயிருடன் இருந்தவரை இந்த தேர்வை அனுமதிக்கவே இல்லை.. ஸ்டே வாங்கி நடத்த விடாமல் தடுத்து வந்தார். அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால் இந்த விவகாரத்தை இந்த அளவுக்கு வளர விட்டிருக்க மாட்டார்.. இரு பெரும் தலைவர்கள் மறைந்தபிறகுதான் நீட் தமிழ்நாட்டிற்குள் புலிப் பாய்ச்சல் காட்டியுள்ளது... இதுதான் பாஜகவின் சாமர்த்தியம் நிறைந்த துணிச்சல்.

எல்.முருகன்
தற்போது ஆட்சியில் இருப்பது அதிமுகதான்.. நீட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்கில் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே, நீட் தீர்ப்பு திரும்ப பெறப்பட்டது யாரால்? ஏன்? கூட்டணியில்தானே பாஜக இருக்கிறது? 60 சீட் வேண்டும் என்று உரிமையாக முருகன் கேட்கும் அளவுக்கு நெருக்கமாகதானே உறவு உள்ளது? இப்படிப்பட்டசூழலில் ஏன் பாஜகவுக்கு ஆளும் தரப்பு போதிய அழுத்தம் தரவில்லை? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

கூட்டணி
கூட்டணியில் உள்ளவர்களும் போதுமான நெருக்கடியை பாஜகவுக்கு தரவில்லை என்பதே உண்மை.. இதே அன்புமணிக்கு எம்பி சீட் வேண்டும் என்று டெல்லிக்கு தந்த அழுத்தத்தை தமிழகம் மறந்துவிடுமா? சுதீஷுக்கு சீட் வேண்டும் என்று டெல்லியிலேயே டேரா போட்ட தேமுதிகவை மறந்துவிட முடியுமா? அதுவும் நீட் தேர்வுக்கு ஆதரவு தந்து பிரேமலதா விஜயகாந்த் பேசுவதை எல்லாம் தமிழக மாணவர் சமுதாயம் அமைதியாக பார்த்துக் கொண்டுதான் உள்ளது.

அன்புமணி
இப்போது வரை மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி தந்துவிட வேண்டும் என்று பாஜக மேலிடத்தில் அளவுக்கு அதிகமாக நட்பு பாராட்டி வரும் துணை முதல்வரின்தான் போக்கை மறந்துவிட முடியுமா? இது எல்லாவற்றையும்தான் தமிழக மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அதிமுக சொல்வது போல, திமுகதான் இதுக்கெல்லாம் காரணம் என்றே வைத்து கொண்டாலும், அதை துடைத்தெறிய நீட்டுக்கு எதிராக அதிமுக செய்து முடித்துள்ள சாதனை என்ன? ஒரே நாளில் 3 பிஞ்சுகளின் உயிர் போனதுதான் மிச்சம்!

தவறுகள்
எத்தனையோ முறை, அதிமுக கொண்டுவந்த நடைமுறையை திமுக உடைத்தது இல்லையா? அல்லது திமுக கொண்டு வந்த தவறான நடைமுறையை ஜெயலலிதா உடைத்தது இல்லையா? கடந்த கால ஆட்சிகளில் நடக்கும் தவறுகளை, இனி வரும் காலங்களில் நடக்காத வகையில் சீர்படுத்தி, செம்மைப்படுத்துவதுதானே ஆட்சியாளர்களின் கடமை?

ஜெ.பாணி
ஜெயலலிதா ஸ்டைலில் அதிமுக செயல்பட்டிருக்க வேண்டும் என்பதே அனைவரின் அபிப்பிராயமாக உள்ளது. ஜெயலலிதா போல ஏன் மத்திய ஆட்சிக்கு நெருக்கடி தந்து காரியம் சாதிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜெயலலிதா பாணியில் போதுமான அழுத்தத்தை பாஜகவுக்கு அதிமுக கண்டிப்பாக கொடுத்திருக்கலாம்.. இந்தத் தேர்வுக்கு ஏதாவது ஒரு வகையில் முடிவும் கட்டியிருக்கலாம். அதை ஜெயலலிதாவுக்குப் பிந்தைய அதிமுக அரசு செய்யத் தவறி விட்டதே என்ற ஆதங்கம்தான் தமிழக மக்களிடம் நிலவுகிறது. "அம்மா"வின் ஆட்சி இதைச் செய்யாமல் விட்டிருக்கலாமா என்ற ஏக்கமும் அவர்களுக்கு இருக்கிறது.

நிர்ப்பந்தம்
ஆக... திமுக மீது குற்றஞ்சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க இன்னும் அழுத்தம் தர வேண்டிய நிர்ப்பந்தமும் நெருக்கடியும் பொறுப்பும், கடமையும் அதிமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் உள்ளது. அவர்கள் ஆக்கப்பூர்வமாக செய்யும்போது நிச்சயம் திமுக உள்ளிட்ட கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.

நம்பிக்கை
தற்போதை சூழலில் எதிர்க்கட்சியான திமுகவால் கண்டனங்களை, ஆலோசனைகளை மட்டுமே சொல்ல முடியும்.. அதைதான் ஸ்டாலின் தினமும் சொல்லி வருகிறார்.. இன்னொரு பக்கம் மாணவர்களுக்கு நம்பிக்கை விதைகளை விதைத்தும் வருகிறார்.. இதையும் தாண்டி எதிர்க்கட்சியால் வேறு என்ன செய்ய முடியும்? எதிர்க்கட்சி சுட்டிக்காட்டும் பிழைகளை, அல்லது ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவது அரசின் கையில்தான் உள்ளது.. இந்த நீட்டை ரத்து செய்வதில்தான் தற்போதைய அரசின் திறமையும் அடங்கி உள்ளது. இதை மட்டும் செய்தால் நிச்சயம் தமிழக மக்களின் உள்ளங்களை ஒட்டுமொத்தமாக கவர முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.... செய்வார்களா?? அவர்கள் செய்வார்களா????












Click it and Unblock the Notifications