முதல்வருக்கு போன உளவுத்துறை தகவல்.. அதே தேதியில் போராட்டம்.. "பக்கா பிளான்".. வெடித்த ஜெயக்குமார்!
சென்னை: திமுகவை தூங்கவிடாமல் செய்கிறது அதிமுக. அதிமுக மாநாட்டுக்கு வரவேற்பு இருக்கும் தகவலை உளவுத்துறை மூலம் முதல்வர் உறுதி செய்துள்ளதால், அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக மாநாடு மதுரையில் பிரமாண்டமாக வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் வரும். 10 லட்சம் பேர் வருகை தருவார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் அன்றைய தினமே திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

உளவுத் துறை தகவலை முதல்வர் உறுதி செய்த நிலையில், அன்றைய தினம் அதிமுக மாநாடு பற்றி யாரும் பேசிவிடக் கூடாது என்பதற்காகத் தான் திமுக அதே தேதியில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தவுள்ளனர். திமுகவை தூங்கவிடாமல் செய்கிறது அதிமுக என்பதற்கு அவர்களது போராட்ட அறிவிப்பே உதாரணம்" என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "எங்கள் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஆனால் திமுகவினர் பேனர் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது. பொள்ளாச்சியில் அதிமுக சார்பாக பலூன் பறக்கவிட்டதற்கு வழக்குப்பதிவு செய்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பணிந்துவிட மாட்டோம். திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக நாங்கள் இருக்கிறோம்.
நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதற்கு திமுகவுக்கு கொஞ்சம் கூட தகுதியில்லை. அவர்களது ஆட்சி காலத்தில் தான் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனைச் செய்யாமல் இருந்து இருந்தால் இந்நேரம் நீட் தொல்லையே தமிழ்நாட்டிற்கு இருந்து இருக்காது.
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் எனும் சுவர் தகர்க்கப்படும் கூறுகிறார். தேர்தல் வந்துவிட்டால் போதும், உடனடியாக முதல்வர் வாய்திறந்துவிடுவார். நீட் தேர்வு தோல்வியால் ஒரு மாணவர் மற்றும் அவரது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது அந்த மாணவரின் நண்பர் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிற்கிறார்.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழல் என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுக ஈடுபடுகிறது. ஆனால் இனி மக்கள் உங்க்ளை நம்பமாட்டார்கள். அதிமுக மாநாடு வெளியே தெரியக்கூடாது என்பதற்காகவே காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, அதனை இருட்டடிப்பு செய்யும் வகையில் ஆகஸ்ட் 20-ல் திமுக போராட்டம் அறிவித்துள்ளது." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications