லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் திமுக.. பொறுப்பாளர்கள் நியமனம்.. அடேங்கப்பா வியூகம் வகுக்கும் ஸ்டாலின்
சென்னை: திமுகவுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்யப்பட்டதன் மூலம் லோக்சபா தேர்தலுக்கு திமுக தீவிரமாகியுள்ளது தெரியவருகிறது.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும். இந்த தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப தேசிய கட்சிகளும் தேசிய கட்சிகளுடன் சேர்ந்து மாநில கட்சிகளும் வியூகம் வகுத்து வருகின்றன. அதுபோல் தமிழகத்திலும் பாஜகவை தோற்கடிக்க திமுக உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸுடன் இணைந்து இந்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி லோக்சபா தேர்தலில் சிறப்பாக பணியாற்ற தேர்தல் பொறுப்பாளர்களை பார்த்து பார்த்து நியமனம் செய்துள்ளார் ஸ்டாலின். அதிலும் பல்வேறு பொறுப்பாளர்கள் வேறு தொகுதிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

80 பேர் வீதம்
இதிலிருந்து லோக்சபா தேர்தலுக்கு ஸ்டாலின் தயாராகி வருவது தெரியவருகிறது. கருணாநிதி இல்லாத நிலையிலும் திமுக மகிழ்ச்சிகரமான வெற்றியை பெற முனைப்பு காட்டி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து மொத்தமுள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு தலா 2 பேர் வீதம் 80 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

யாருக்கு பொறுப்பு
திமுகவின் வெற்றிக்கு வித்திடும் வகையில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீலகிரிக்கு டி.ஆர். பி. ராஜா (டி.ஆர். பாலுவின் மகன்), கோவைக்கு மகேஷ் பொய்யாமொழி, கரூருக்கு சுப்புலட்சுமி ஜெகதீசன், தஞ்சாவூருக்கு கடலூரைச் சேர்ந்த இள.புகழேந்தி, விருதுநகருக்கு பூங்கோதை ஆலடி அருணா, திருவண்ணாமலைக்கு சுகவனம் என 40 தொகுதிகளுக்கு வெவ்வேறு தொகுதியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்ப்பு
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகிய எஸ்.ஆர்.பார்த்தீபன், வி. சி. சந்திரகுமார் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்களும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவில் இணைப்பு
இதில் பார்த்தீபன் நாமக்கல் தொகுதிக்கும், சந்திரகுமார் சேலம் தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே தேமுதிகவில் விஜயகாந்துக்கு நெருக்கமாக இருந்து தேர்தல் வியூகங்களை வகுத்தவர்கள். தேமுதிக கணிசமான வெற்றியை பெற இவர்களும் ஒரு காரணம் என சொல்லலாம். அந்தளவுக்கு உழைக்கக் கூடியவர்கள்.

புதியவர்களை பயன்படுத்தும் தந்திரம்
எனவே கட்சிக்கு புதியவர்களாக இருந்தாலும் அவர்களின் திறமையை மதித்து அவர்களும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது ஸ்டாலின் மற்றவர்களின் திறமையை பயன்படுத்த விரும்புகிறார் என்றும் அவர் கருணாநிதி வழியை பின்பற்றத் தொடங்கிவிட்டார் என்றும் தெரிகிறது. லோக்சபா தேர்தல் வெற்றி என்ற இலக்கை மட்டுமே நோக்கி ஸ்டாலின் புது பரிணாமத்துடன் பயணம் செய்கிறார். இதற்காக அவர் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications