கனிமொழி பற்றி 'உதயா' போட்ட ட்வீட்! சமாதான கொடி விண்ணை முட்டி பறக்குதய்யா.. உற்சாகத்தில் உ.பி.க்கள்!
சென்னை: திமுகவின் இளைஞர் அணி மாநாட்டில் துணைப் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்பியுமான கனிமொழி கட்சி கொடி ஏற்றுவார் என்ற அறிவிப்பு அக்கட்சி தொண்டர்களை ஆச்சரியப்பட வைத்தது. தற்போது தமது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் கனிமொழி குறித்து பதிவிட்டிருப்பது திமுக தொண்டர்களை கொண்டாட்ட மோடுக்கு மாற்றிவிட்டது.
திமுகவில் கருணாநிதி காலத்தில் மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலின் இடையேயான அதிகாரச் சமநிலை விவாதத்துக்குரியதாக இருந்தது. டெல்லியில் மத்திய அமைச்சராக மு.க.அழகிரி பதவியேற்று திரும்பும் போது தமிழ்நாட்டின் துணை முதல்வரானார் மு.க.ஸ்டாலின். திமுகவில் அழகிரி, ஸ்டாலின் இருவருக்குமான அதிகாரச் சமநிலையை கருணாநிதி உன்னிப்பாக உருவாக்கி வந்தார். அழகிரியின் திமுக சகாப்தம் என்பது கருணாநிதி காலத்திலேயே முடித்து வைக்கப்பட்டதானது. அதன் பின்னர் மு.க.ஸ்டாலின், கனிமொழி இடையே அதிகாரச் சமநிலை என்பது பேசப்படவில்லை. கனிமொழிக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டுமே என்கிற ஆதங்கம்தான் இருந்தது.

உதயநிதி, கனிமொழி: ஒருகட்டத்தில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்த போதுதான் உதயநிதி ஸ்டாலின் - கனிமொழி இடையேயான அதிகாரச் சமநிலை குறித்த விவாதங்கள் எழுந்தன. இருதரப்புக்கும் இடையே சில விவகாரங்களில் வெளிப்படையான அதிகார மோதல்களையும் நாடும் நாட்டு மக்களும் பார்த்து கொண்டிருந்தனர். இதன் உச்சமாக திமுக மகளிரணிக்கு இணையாக திமுக இளைஞர் அணியில் இளம் பெண்கள் அணி உருவாக்கும் முயற்சிகளும் நடைபெற்றது. சட்டசபை தேர்தலில் உதயநிதியின் ஒற்றை செங்கல் பிரசாரமே ஒட்டுமொத்த திமுகவின் வெற்றிக்கும் காரணம் என பிரகடனம் செய்யப்பட்டது. இன்னொரு பக்கம் தந்தை கருணாநிதி போலவே முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒருவிதமான சமநிலையை உருவாக்கும் வகையில் கனிமொழியை திமுக துணைப் பொதுச்செயலாளராக்கினார். ஆனாலும் திமுகவின் டெல்லி அரசியல் தமது முகமாக இருக்க வேண்டும் என்ற கனிமொழி தரப்பின் ஆதங்கம் இப்போதும் நிறைவேறாமல் இருக்கிறது. இந்த விவாதங்கள் திமுகவிலும் சரி திராவிட இயக்கங்களிலும் சரி விவாதத்துக்குரியதாக இருந்து வருகிறது.
பிறந்த நாளை முன்னிட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சி.ஐ.டி.காலனி இல்லத்துக்கு சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தோம். மேலும், பாட்டியார் மற்றும் கழக துணை பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் - அத்தை @KanimozhiDMK அவர்களிடம் வாழ்த்து… pic.twitter.com/dft1EWhaTL
— Udhay (@Udhaystalin) November 27, 2023
இளைஞரணி மாநாட்டில் கனிமொழி: இந்நிலையில்தான் சென்னையில் 'இந்தியா' கூட்டணி பெண் தலைவர்களை அழைத்து பிரம்மாண்ட மாநாடு நடத்தினார் கனிமொழி. அவரது அரசியல் கிராப்பில் கிடுகிடு ஏறுமுகத்தைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து திமுக இளைஞரணி மாநில மாநாட்டி, திமுகவின் பிரம்மாண்ட மாநில மாநாடு போல நடத்துவதில் அதி தீவிர முனைப்பில் இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இங்கேதான் யாரும் எதிர்பாராத சமாதான திருப்பம் நிகழ்ந்தது. சேலத்தில் டிசம்பர் 17-ல் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றப் போவது அமைச்சர் உதயநிதியின் அத்தை கனிமொழி எம்.பி.தான் என்கிற அறிவிப்புதான். ஒட்டுமொத்த திமுக தொண்டர்களையும் ஒருகனம் ஆச்சரியப்பட வைத்தது இந்த அறிவிப்பு.
உதயநிதி ட்வீட்: இதனைத் தொடர்ந்து இன்று தமது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது ரொம்பவே திமுகவினரை கொண்டாட வைத்துவிட்டது. அதில், பிறந்த நாளை முன்னிட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சி.ஐ.டி.காலனி இல்லத்துக்கு சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தோம். மேலும், பாட்டியார் மற்றும் கழக துணை பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் - அத்தை @KanimozhiDMK அவர்களிடம் வாழ்த்து பெற்றோம் என பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கனிமொழியை அத்தை என பொதுவெளியில் உரிமையுடன் உதயநிதி அழைப்பதைத்தான் திமுக தொண்டர்கள், இப்படியான ஒற்றுமையைத்தானே எதிர்பார்க்கிறோம் என தீபாவளி திருவிழாவைப் போல கொண்டாடுகின்றனர்.












Click it and Unblock the Notifications