திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்?
சென்னை: திமுக சார்பில் தென் மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு போட்டியிட விரும்பும் நபர்களுக்கு கடந்த 18ஆம் தேதி நடத்தப்பட்ட நேர்காணலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் கனிமொழி பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதியாகும். இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, விருப்பமனு தாக்கல், நேர்காணல் என பிஸியாக இருந்து வருகின்றன.

அந்த வகையில் 21 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் திமுக, கடந்த சில தினங்களாக விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு அளித்தோரிடம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் டிக் அடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் தொடங்கியது. அந்த வகையில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்- போடியிலும், சபாநாயகர் அப்பாவு- ராதாபுரத்திலும், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன்- திருச்செந்தூரிலும், கீதா ஜீவன் தூத்துக்குடியிலும் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளில் போட்டியிட 750 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களிடம் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சென்னை மாவட்டம் உள்ளிட்டவைகளில் உள்ள சில தொகுதிகளில் கனிமொழியும் போட்டியிட, அவரது ஆதரவாளர்கள் விருப்பமனு அளித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் கனிமொழியிடமும் நேர்காணல் நடத்தப்படும் என ஆதரவாளர்கள் நினைத்தனர். ஆனால் அவர் அழைக்கப்படவில்லை. அவரை ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து கனிமொழி வட்டாரங்கள் சிலரை கேட்ட போது, மண்டல பொறுப்பாளர்கள் யாரும் நேர்காணலுக்கு வர வேண்டாம் என தலைமை சொல்லிவிட்டதால் கனிமொழி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications