பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் திமுக வேட்பாளர் பட்டியலில் பட்டதாரிகள் பெண்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த முறை சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. அதாவது, திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, தமிழக வெற்றிக் மற்றும் நாம் தமிழர் ஆகியவை தனித்தனியாக களமிறங்குவதால் தேர்தல் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்தலில் திமுக மொத்தம் 164 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 70 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது திமுக நேரடியாக போட்டியிடும் 164 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இந்த பட்டியலில் பல முக்கிய தலைவர்கள் தங்களது பாரம்பரிய தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகின்றனர். அதன்படி, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் களம் காண்கிறார். அதேபோல், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
மேலும், காட்பாடி தொகுதியில் மூத்த தலைவர் துரைமுருகன் மீண்டும் களம் காண்கிறார். ஆனால் கடந்த முறை கரூரில் வென்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் பட்டம் பெற்றவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் ,பெண்கள் ஆகியோரின் எண்ணிக்கை குறித்து தனியே தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் திமுக வேட்பாளர் பட்டியலில் 125 பேர் படித்து பட்டம் பெற்றவர்கள் என்பதோடு, பெண்கள் 18 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முனைவர்கள் பட்டதை ஏழு பேரும், மருத்துவர் பட்டத்தை 15 பேரும் பெற்றிருக்கின்றனர். பொறியியல் பட்டதாரிகள் 17 பேர், சட்டம் படித்தோர் 29 பேர், புது முகங்கள் 60க்கும் அதிகமான உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications