சைதை துரைசாமிக்கு 2 நாள் கெடு.. அரசியலை விட்டே விலக ரெடி.. "மா.சு" அதிரடி.. பரபரக்கும் சைதாப்பேட்டை
சென்னை: என் மீதான குற்றச்சாட்டுகளை, அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார் என்று, சைதாப்பேட்டை திமுக வேட்பாளர், மா.சுப்ரமணியன் சவால் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் போட்டியிடும் மா.சுப்ரமணியன் திமுக தேர்தல் பணிமனையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
என்னுடைய நண்பர் ஜம்புலிங்கம் 2 லட்சம் ரூபாய்க்கு எனக்கு வீடு வாங்கி தந்தார். 1996 முதல் அந்த வீட்டில் நான் குடியிருக்கிறேன். மேயர் தேர்தலில் நான் தாக்கல் செய்த பிரமாண பாத்திரத்தில் அதை கூறியுள்ளேன்.
சிட்கோ நிலம்
நான் தங்கியிருக்கும் வீட்டு மேற்கூரை மட்டுமே எனக்கு சொந்தம், இடம் சிட்கோவுக்கு சொந்தம் என அதில் நான் குறிப்பிட்டுள்ளேன். எனவே, சிட்கோ நிலத்தை நான் அபகரித்து விட்டேன் என கூறி வருகின்றனர். சாதாரண 1100 சதுர அடி நிலத்தில் குடியிருக்கும் என் மீது சைதை துரைசாமி குற்றம் சாட்டுகிறார். நான் பொய்யான ஆவணங்களை வழங்கி எனது மனைவி பெயரில் நிலம் வாங்கியதாக சைதை துரைசாமி நிரூபித்தால் அரசியலில் இருந்து நான் விலகி விடுகிறேன். என் மீதான நில அபகரிப்பு வழக்கிற்கு முறையான ஆதாரம் வழங்க முடியவில்லை என்பதால் என் மீது களங்கம் விளைவிக்க பார்க்கிறார்.
2 நாள் கெடு
மேலும், மே 2ம் தேதிக்கு பிறகு சைதை துரைசாமி அரசியலிலிருந்து விலகி விடுவார். எனவே, அவரை குறுக்கு வழியில் தோற்கடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. சைதை துரைசாமியுடன் விவாதத்திற்கு நான் தயார், இரண்டு நாட்களுக்குள் சைதை துரைசாமி இதனை நிரூபிக்க வேண்டும். என் மீதான குற்றச்சாட்டை நீருப்பித்தால் அரசியலை விட்டே விலக தயார். அப்படி குற்றச்சாட்டை நிரூப்பிக்க தவறினால் சைதை துரை சாமி தேர்தலில் போட்டியிடாமல் விலக தயாரா.
நில அபகரிப்பு
2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. சென்னை பெரு வெள்ளம் குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பிய போது பதிலளிக்காமல் சென்றவர் சைதை துரைசாமி. சைதை துரைசாமி மீது 10க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு வழக்கு உள்ளது.
மா.சு. பேட்டி
சைதாப்பேட்டை வரலாற்றில் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். மே 2ம் தேதிக்கு பிறகு சைதை துரைசாமி மீது உள்ள நில அபகரிப்பு வழக்கை சட்டபூர்வமாக கொண்டு செல்வேன். தேர்தலில் தோற்றால் காரணம் கூறுவதற்கு சைதை துரைசாமி என் மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார் என மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.