அரசு மருத்துவர்கள் போராட்டம்.. ஒன்றாக தரையில் உட்கார்ந்து பேசிய ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோ!
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களோடு தரையில் அமர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போதுமான ஊதியம் கிடைக்கவில்லை, பதவி உயர்வு வழங்கப்படுவது இல்லை, காலி மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்து போராட்டம் நடந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வைத்த இந்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. ஆனால் மருத்துவர்களின் காலக்கெடு முடிந்த பின்பும் கூட, தமிழக அரசு கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதனால் தற்போது தமிழகம் முழுக்க தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது.
தமிழகம் முழுக்க மொத்தம் 20000 மருத்துவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனை வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசு இவர்களுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டு மருத்துவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்தார். அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். அதோடு மருத்துவர்களுடன் தரையில் உட்கார்ந்து அவர் சில நிமிடம் பேசினார். அவரின் இந்த செயல் மருத்துவர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த போட்டோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழக மருத்துவர்கள் போராட்டத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டு. மருத்துவர்கள் உடலை வருத்திக்கொண்டு போராட வேண்டாம். அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்., என்று ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications