இன்று திருவாரூரில் இருந்து... தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் ஸ்டாலின்
சென்னை: வரும் சட்டசபை தேர்தலுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து இன்று மாலை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து முக்கிய கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

திமுக இந்த முறை மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்கிறது. சுமார் 170க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக இந்த முறை களமிறங்குகிறது.
தொகுதிப் பங்கீடு இறுதியானதும், கடந்த வெள்ளிக்கிழமை திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சனிக்கிழமை திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில் கருணாநிதியின் சொந்க ஊரான திருவாரூர் தெற்குரத வீதியில் அவர் பிரசாரத்தைத் தொடங்குகிறார். திருவாரூரில் போட்டியிடும் பூண்டி கலைவாணர், மன்னார்குடியில் போட்டியிடும் டிஆர்பி ராஜா, நன்னிலத்தில் போட்டியிடும் ஜோதிராமன் ஆகியோருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
நாளை அறந்தாங்கி, ஆலங்குடி, வீரபாண்டி, ஏற்காடு, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொள்கிறார். அதேபோல புதன்கிழமை நத்தம், மதுரை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வியாழக்கிழமை திருவள்ளூர், திருப்பத்தூர், சிவகங்கை, புதுக்கோட்டை, விராலிமலை உள்ளிட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்காக ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை ஒரத்தநாடு, தஞ்சை, திருப்பூர், கோவை பகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்காக ஸ்டாலின் வாக்கு சேகரிக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications