அதிகாரத்தை மீறுகிறார்கள்.. ரெய்டை தடுத்து நிறுத்துங்கள்.. தேர்தல் கமிஷன் கதவை தட்டிய திமுக.. புகார்
சென்னை: தமிழகத்தில் திமுக நிர்வாகிகள் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக திமுக சார்பாக தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடக்கும் திடீர் ஐடி ரெய்டு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை சென்னையில் உள்ள ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

இதை தொடர்ந்து கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. அதோடு அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் சோதனை நடக்கிறது. திமுகவினர் வீடுகளில் அடுத்தடுத்து ரெய்டு நடக்கிறது.
இந்த நிலையில் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக திமுக சார்பாக தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக மீதான வருமான வரி சோதனை என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி திமுகவின் வெற்றிவாய்ப்பை பறிக்க அதிமுக- பாஜக முயல்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிதான் வெல்லும் என்பது உறுதியாகிவிட்டது. திமுகவின் வெற்றி உறுதியானதால் மத்திய பாஜக அரசு இப்படி வருமானவரித்துறையை ஏவுகிறது . தேர்தல் நேரத்தில் எங்கள் தேர்தல் பணிகளை முடக்கும் வகையில் பாஜக இப்படி செயல்படுகிறது.
இது முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம். இதில் உடனே தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும். தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். அதிகாரிகளைத் தவறாக பயன்படுத்தக் கூடாது என பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும், தமிழகத்தில் நடக்கும் சோதனைகளுக்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்று திமுக சார்பாக தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications