ஆட்சியில் பங்கு வேண்டும் எனில்.. கூட்டணி விட்டு வெளியேறலாம்! காங்கிரசுக்கு மெசேஜ் அனுப்பியதா திமுக?
சென்னை: ஆட்சியில் பங்கு வேண்டும் என அடம்பிடித்தால், கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்ற தொனியில் திமுக தரப்பிலிருந்து காங்கிரஸ் தரப்பிற்கு மறைமுக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், எம்.பி. விஜய் வசந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிகாரபூர்வமாக கட்சி ரீதியான கூட்டங்களில் பங்கேற்க அவர் வந்திருந்தாலும், திமுக - காங்கிரஸ் இடையிலான ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்த மோதல்கள் இந்த வருகையின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளன.
அதிகாரப் பகிர்வு: வலுக்கும் மோதல்
கடந்த சில வாரங்களாகவே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் நாங்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை மற்றும் மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இருப்பினும், திமுக தரப்பு இதற்கு ஆரம்பத்திலிருந்தே முரண்பட்டு வருகிறது. அதிகாரப் பகிர்வு என்பது தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு ஒத்து வராது என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் அதிரடி பதில்
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிகாரப் பகிர்வு குறித்த காங்கிரஸின் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்தார். அவர் கூறியதாவது:
கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்திற்குச் செட் ஆகாது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் (காங்கிரஸ்) தெரியும். தேவையற்ற குழப்பங்களை விளைவிக்கச் சிலர் சதி செய்கிறார்கள்.
திமுக தனித்து ஆட்சி அமைப்பதிலேயே உறுதியாக இருப்பதாகவும், வலுவான நிலையில் இருக்கும்போது அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்றும் திமுக கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆட்சியில் பங்கு வேண்டும் என அடம்பிடித்தால், கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்ற தொனியில் திமுக தரப்பிலிருந்து மறைமுக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதாவது திமுக தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட மெசேஜில்.. நீங்கள் கூட்டணியில் இருக்கலாம்.. ஆனால் ஆட்சியில் பங்கு இருக்காது.. பங்கு வேண்டும் என்றால் நீங்கள் கூட்டணியில் இருந்தே வெளியேறலாம், என்று காங்கிரஸிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம்.
ராகுல் காந்தியைத் தனது "சகோதரர்" என்று அழைக்கும் ஸ்டாலின், தனிப்பட்ட முறையில் சுமூகமான உறவைப் பேணினாலும், ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்தவரை சமரசம் செய்யத் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். இதை இனி காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2026 தேர்தலும் தொகுதிப் பங்கீடும்
கே.சி. வேணுகோபாலின் இந்த வருகை, பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கவுள்ள தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை கூடுதல் இடங்களைக் கோரி வருகிறது. ஆனால், திமுக தலைமையோ முந்தைய தேர்தலின் அதே எண்ணிக்கையையே ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications