6 மாதங்களுக்கு முன்பே ஸ்டாலின் கொடுத்த உறுதி.. காங்கிரஸ்க்கு ஒரு இடம் கூட குறையாது! செல்வப்பெருந்தகை
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட குறைக்கப்படாது என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைக்க பாஜக சதி செய்வதாக கூறிய செல்வப்பெருந்தகை, தலித் மற்றும் சிறுபான்மை வாக்குகளை பிரிக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில், திமுக இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக் குழு கூட அமைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பணிகள் தாமதமாகி இருக்கிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி
ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்திருக்கும் சூழலில், திமுக தலைமை அதனை ஏற்கவில்லை. அதேபோல் அதிக தொகுதிகள் கோரி காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்துள்ளதால், கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையே பெற்றுக் கொள்ள அந்தந்த கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
செல்வப்பெருந்தகை பேட்டி
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில், பாஜகவை பொறுத்தவரை இந்தியா கூட்டணியை சிதைக்க வேண்டும். எல்லா மாநிலங்களிலும் அதனை செய்து பார்த்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி இணக்கமாக வலிமையாக உள்ளது.
பாஜகவின் சதித்திட்டம்
அதேபோல் காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து வெளியில் கொண்டு வர வேண்டும். இதுதான் பாஜகவின் முதன்மை திட்டம். தவெகவை பற்றி நான் பேசவில்லை. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு சிறுபான்மை மக்கள் மற்றும் தலித் மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். இதனை பிரிக்க வேண்டும்.. அப்படி பிரித்துவிட்டால் பாஜக தமிழ்நாட்டை பிடித்துவிட முடியும் என்று நம்புகிறார்கள்.
ஸ்டாலின் கொடுத்த உறுதி
மதவாத சக்திகள் தமிழ்நாட்டை பிடிக்க நாங்கள் எப்படி அனுமதிப்போம்? கடலூர் மாவட்டத்திற்கு ஒரு 6 மாதங்களுக்கு முன் ஸ்டாலின் சுற்றுப்பயணம் வந்திருந்தார். அப்போதே என்னிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட குறைக்கப்படாது என்று உறுதி அளித்தார். அதில் தெளிவாக இருப்பதாகவும் கூறினார். திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
கூட்டணி நிச்சயம்
இன்னும் ஒரு வாரத்தில் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும், புதிய கட்சிகளை சேர்க்க வேண்டும் என்று நானும் வலியுறுத்தி உள்ளதாக கூறியுள்ளார். இதனால் தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. தொகுதி பங்கீட்டில் தான் சில பிரச்சனைகள் நீடித்து வருவதாகவும் புரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications