அவங்க வாயாலயே இந்தா அம்பலமாகிடுச்சுல்ல.. நாடகம்.. வீடியோ ஆதாரத்தோடு போட்டு திமுகவை விளாசிய அண்ணாமலை!
சென்னை: காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்துவதைப் போல நடிக்க வேண்டும் என திமுக மாவட்ட நிர்வாகி பேசும் வீடியோவை வெளியிட்டு, "திமுகவின் உண்மையான நோக்கம் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது மட்டுமே என்பதை அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்" என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
காவிரி நீரை கர்நாடகா தருகிறதோ இல்லையோ, நாம் போராடுவது போல் நடிக்க வேண்டும் என்று திமுக நிர்வாகி ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மயிலாடுதுறையில் திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாகை மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர் பேசும் வீடியோ ஒன்று தற்போது பரவி வருகிறது. அதில், காவிரி நீரை கர்நாடகா தருகிறதோ இல்லையோ, நாம் போராடுவது போல் நடிக்க வேண்டும் என்று பேசுகிறார். இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரும் பங்கேற்றுள்ளார்.

இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டு, திமுக - காங்கிரஸ் நாடகம் அம்பலகாகியுள்ளது என விமர்சித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில், திமுகவின் டெல்டா பகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் காவிரி நீருக்காக போராடுவது போல நடிக்க வேண்டும் என்று திமுக நிர்வாகி, காங்கிரஸ் எம்.எல்.ஏ முன்னிலையில் உரையாடும் காட்சி சப் - டைட்டிலோடு இடம்பெற்றுள்ளது.
அண்ணாமலை பதிவில், "திமுகவின் டெல்டா பகுதி நிர்வாகிகள் கூட்டத்தின் காணொளி ஒன்றைக் காண நேர்ந்தது. அந்தக் காணொளியில், வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க, கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போராடுவது போல நடிக்க வேண்டும் என்று நாகை மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர் பேசுகிறார். அவர், திமுக நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் என்று அறிகிறேன். மேலும் அந்தக் கூட்டத்தில், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாரும் பங்கேற்றுள்ளார்.
சட்டசபையில், காவிரிப் பிரச்சனைக்காக தீர்மானம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிய திமுக, தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், செய்தியாளர்கள் முன்னிலையில், போராட்டம் நடத்தப் போகிறோம் என்று கூறிவிட்டு, அவர்கள் சென்ற பிறகு போராடுவதைப் போல நடித்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
திமுக காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தமிழக மக்களுக்குத் துரோகங்கள் செய்வதே வரலாறு. காவிரிப் பிரச்சினையில், நாளொரு நாடகம் நடத்தி வரும் திமுக, தற்போது மக்களை ஏமாற்ற, கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்ப்பது போல ஒரு மாயையைக் காட்ட வேண்டும் என்று, போராட்டம் நடத்துவது போல நடிக்கவிருக்கிறது. இவர்களின் உண்மையான நோக்கம், மக்களுக்கான உண்மையான தீர்வு அல்ல; மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது மட்டுமே என்பதை அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications