12 + 1 கேட்கும் காங்கிரஸ்.. நோ சொன்ன திமுக.. தொடரும் பஞ்சாயத்து.. தலையிடுவாரா ராகுல்?
திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
Recommended Video
சென்னை: எல்லோருக்கும் முந்தி திமுகவும் காங்கிரசும் கூட்டணியை உறுதிபடுத்தி வைத்து கொண்டாலும் இன்னும் சீட் விவகாரத்தில் இழுபறியே நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இருந்தே சிங்கிள் டிஜிட் சீட்தான் தர வேண்டும் என்பதில் திமுக கறாராக இருந்து வந்து கொண்டிருப்பதால்தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுவரை சுமூக முடிவு எட்டவில்லை.
காங்கிரஸ் இரட்டை இலக்கத்தில் 12 சீட்களுக்கு குறையாமல் கேட்க, திமுக அதற்கு திட்டவட்டமாக நோ சொல்லிவிட்டது. மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் காங்கிரஸ் கேட்க, அதற்கும் இதுவரை எந்த பதிலும் திமுக தரப்பிலிருந்து வரவில்லை என தெரிகிறது.
தொகுதி பங்கீட்டு குழு
ஏனெனில் காங்கிரசின் ஓட்டு வங்கி இப்போது குறைந்துவிட்டது என்றும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வழங்கிய பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதாலும், 6 முதல் 8 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் உள்ள தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
8 தொகுதிகள்
அதனாலேயே 8 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும் என திமுக கறாராக தெரிவிக்கப்பட்டதாம். இதனால் காங்கிரசில் கோஷ்டியில் ஒருவருக்கு சீட் கிடைப்பதே கேள்விக்குறியாகிவிட்டதாம். திமுக சார்பில் அளிக்கப்படும் 8 தொகுதிகளிலும், தாங்கள் சொல்லும் வேட்பாளர்களை போட்டியிட வைத்தால் அனைவரையும் வெற்றிபெற வைப்பது தங்கள் பாடு என அறிவாலய வட்டாரத்தில் உறுதி கொடுக்கப்பட்டதாம்.
நெளிகிறது
அதுமட்டுமல்ல, காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக இந்தியாவிலேயே முதல்முறையாக ஸ்டாலின் அறிவித்ததால், டெல்லி தலைமையும் திமுகவுக்கு போதிய அழுத்தம் கொடுக்க முடியாமல் நெளிகிறதாம்.
பஞ்சாயத்து
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தொகுதி பங்கீடு பஞ்சாயத்துக்காக டெல்லி சென்றுள்ளதாக தெரிகிறது. மதிமுக, இடதுசாரிகள், விசிக போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், 12 தொகுதிகள் வரை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மேலிடத்தில் வலியுறுத்தி வருகிறார்கள். அங்கு பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டு தொகுதி பங்கீடு விவகாரம் இறுதி கட்டத்தை அடையும் என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தினர்.
புள்ளி விவர கணக்கு
மேலும், இந்த வாரம் டெல்லியில் இருந்து குலாம்நபி, கே.சி.வேணுகோபால், உள்ளிட்ட தலைவர்களில் யாராவது ஒருவர் பேச்சுவார்த்தையை பைனல் பண்ண அறிவாலயம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதியை குறைத்து கொடுப்பதற்கான காரணம் மற்றும் புள்ளி விவர கணக்குகளை காங்கிரஸ் தலைமையிடம் விளக்கமாக எடுத்துச்சொல்ல நாங்களும் தயாராக உள்ளதாக கூறுகின்றனர் திமுகவினர்.