மின்சாரம் தாக்கி விபத்து.. அப்ப கூட அசரலயே.. மக்களை வியக்க வைத்த திமுக கவுன்சிலர் பரிதி இளம் சுருதி!
சென்னை: தன்னை மின்சாரம் தாக்கிய நிலையிலும், வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் தளராத திமுக கவுன்சிலர் இளம் சுருதியின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம் சுருதி, சென்னை அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட எழும்பூர் பகுதி வார்டு எண் 99ன் மாமன்ற உறுப்பினராக உள்ளார். திமுக சார்பாக போட்டியிட்டு மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சென்னை மாமன்ற கவுன்சிலராகப் பணியாற்றி வருகிறார் பரிதி இளம்சுருதி.

மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை தொடங்கிய நாள் முதலே தனது வார்டு முழுவதும் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார் இளம் சுருதி. கொட்டும் மழையிலும், ரெயின் கோட் அணிந்து கொண்டு, தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களைப் பார்வையிட்டு, மழைநீரை அகற்றும் பணிகளை முடுக்கி விட்டு வந்தார்.
ராஜா அண்ணாமலை சாலை, அழகப்பா சாலை உள்ளிட்ட தனது வார்டின் அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்தி, மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து விரைந்து மீள்வதற்கு துணை நின்றார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் (நவம்பர் 9ஆம் தேதி) அதிகாலை இளம் சுருதி வீட்டில் மின் கசிவால் அவருக்கு மின் விபத்து ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் இளம் சுருதி. இதற்கிடையே, அவர் தனது வாட்ஸ் - அப்பில் வைத்த ஸ்டேட்டஸ், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் சுருதி, தனது பதிவில், "அதிகாலை 4.30 மணி அளவில் எனது இல்லத்தில் ஏற்பட்ட மின்சாரக் கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கி பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனை செல்ல உள்ளேன். எனவே, ஏதேனும் குறைகள் இருந்தால் குழுவில் பதிவிடவும். மாநகராட்சி அதிகாரிகள் அதை சரி செய்து தருவார்கள். மருத்துவ ஆலோசனை பெற்று மீண்டும் களத்தில் வந்து பணியாற்றுவேன்" எனத் தெரிவித்திருந்தார்.
தான் மின் கசிவால் பாதிப்புக் குள்ளாகி மருத்துவமனைக்குச் செல்லும் நிலையிலும், மக்களுக்கான பணிகளில் எந்த சுணக்கமும் இருக்ககூடாது என்பதற்காக, தகவலை பதிவிட்டு, நம்பிக்கை அளித்த இளம் சுருதியை அவரது வார்டு மக்களும், நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.
திமுகவின் சிறந்த கொள்கைப் பேச்சாளராக விளங்கி கருணாநிதியின் பெரும் நம்பிக்கையைப் பெற்றவர் இளம் சுருதியின் அப்பா பரிதி இளம்வழுதி. வீர அபிமன்யூ என மறைந்த முதல்வர் கருணாநிதியில் போற்றப்பட்டவர். 25 வயதில் எம்.எல்.ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தவர். 1989 முதல் 2011 வரை தொடர்ந்து 5 முறை எழும்பூர் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தார். 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் இருந்தார். இளைஞரணியில் ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றிய பரிதி இளம்வழுதி, பின்னர் கருத்து வேறுபாடுகளால் அதிமுகவுக்குச் சென்றார்.
எனினும், அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் இளம் சுருதி, திமுகவில் பணியாற்றி வருகிறார். திமுகவின் அயலக அணி துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார் பரிதி இளம் சுருதி. மிக்ஜாம் புயல் வெள்ள மீட்பு பணிகளில் ஓடியாடி வேலை செய்த பரிதி இளம் சுருதி, மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி மீண்டும், பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications