மதவாதத்திற்கு எதிராக 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறை' கூட்டங்கள்.. திமுக மாவட்டச் செயலாளர்கள் முடிவு!
சென்னை: தமிழகம் முழுவதும் 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறை' கூட்டங்கள் நடத்துவது என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பதை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்தக் கூட்டங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

பயிற்சிப் பாசறை
2023-ல் நூற்றாண்டு விழா காணவிருக்கும் கலைஞரையும் அவரது கொள்கைகளையும், அவர் வழியில் "திராவிட மாடல்" ஆட்சி நடத்தி, தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்துள்ள கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளையும், இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்த்திடும் வகையில், மாநிலம் முழுவதும் 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறை'க் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவது என இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

இளைய பட்டாளம்
இளைய பட்டாளத்தின் இணையற்ற கைகளில், கருத்தியல் ஆயுதங்களை வழங்கிடும் வகையில் கழகத்தின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அணிகள் இத்தகைய கூட்டங்களை அரங்குகளிலும் - இணைய வழியாகவும் தொடர்ந்து நடத்திட முறையான திட்டங்கள் வகுக்கவும், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கழகங்கள் செய்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

தொடர்ச்சியாக
தமிழ் நிலத்தில், சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல், மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத - அபாயகர சக்திகளையும், அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளையும், விலை போகும் வீணர்களையும் அடையாளம் காட்டி, அவர்களிடமிருந்து தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திட 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறை'க் கூட்டங்களை வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் நடத்திட இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானம் செய்து உறுதி ஏற்கிறது.
Recommended Video

காலத்தின் அவசியம்
'திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக்' கூட்டங்கள் நடத்துவதை காலத்தின் கட்டாயமாக பார்க்கிறது திமுக தலைமை. இதனால் தான் இந்தளவுக்கு இதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே தீர்மானமுமாக நிறைவேற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications