நன்னிலம் தொகுதிக்கு மாறும் பூண்டி கலைவாணன்.. அதிமுக முன்னாள் அமைச்சருக்கு செக்.. ஸ்டாலினின் கணக்கு!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதும், திருவாரூர் தொகுதி எம்எல்ஏ பூண்டி கலைவாணன் நன்னிலம் தொகுதிக்கு மாற உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக நன்னிலம் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு செக் வைக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், நட்சத்திர வேட்பாளர்களுக்கான தொகுதிகள் கிட்டத்தட்ட திமுக தலைமையால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்கவும் முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். இருப்பினும் நகர்ப்புறங்களில் விஜய்யின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் அதிகளவிலான வாக்குகளை பிரிப்பார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் தலைநகரில் சில தொகுதிகளில் திமுக பின்னடைவை சந்திக்கலாம் என்று திமுக தலைமைக்கு தெரிய வந்துள்ளது. சேப்பாக்கம் தொகுதியில் திமுக முன்னிலையில் இருப்பதாக சர்வே ரிப்போர்ட் வந்தாலும், உதயநிதி ஸ்டாலினை திருவாரூர் தொகுதிக்கு மாற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினும் ஓகே கூறி இருக்கிறார். ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பின் திருவாரூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் ஆகியவற்றில் பூண்டி கலைவாணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருவாரூர் மாவட்ட பொறுப்பில் பூண்டி கலைவாணன் இருந்தாலும், நன்னிலம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்ந்து வென்று வருகிறார்.
இம்முறை திருவாரூர் மாவட்டத்தின் 4 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக தலைமை தீவிரமாக உள்ளது. இதனால் நன்னிலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் காமராஜை வீழ்த்த பூண்டி கலைவாணன் சரியாக இருப்பார் என்றும் கணக்கிட்டுள்ளது. அதற்கேற்ப நன்னிலம் தொகுதியில் எந்த நல்லது, கெட்டது நடந்தாலும் பூண்டி கலைவாணன் ஆஜராகிவிடுகிறார்.
இதனால் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் தொகுதியிலும், பூண்டி கலைவாணன் நன்னிலம் தொகுதியிலும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. முன்னதாக உதயநிதி ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவதாக பேசப்பட்டது. ஆனால் எழிலன் மிகச்சிறப்பாக அந்த தொகுதியில் பணியாற்றி வருவதால், அவரை சிரமப்படுத்த வேண்டாம் என்று திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications