நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... மின் கட்டண உயர்வை கண்டித்து தொடர் போராட்டங்கள்..?
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மின் கட்டண உயர்வு குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுத்து போராட்டம் நடத்துவது பற்றி நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
கொரோனா பரபரப்புக்கு மத்தியில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை நடைபெறுகிறது. வழக்கமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறும் நிலையில் கொரோனா எதிரொலியாக காணொலி காட்சி மூலம் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. மின் கட்டண உயர்வால் மக்கள் படும் சிரமங்கள் குறித்து நாளை ஆலோசிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
விலை உயர்வு
மேலும், பெட்ரோல் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே வருவது பற்றியும், மக்களின் வாழ்வாதாரம் குறித்தும் நாளைய கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் விரிவாக விவாதிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம், மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவது, சேது சமுத்திர திட்டப் பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனக் கூறப்படுகிறது.
ஆலோசனை
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் பணிகளை தொடங்குவது பற்றி முக்கிய ஆலோசனை நடத்த அதிக வாய்ப்புள்ளது. இதேபோல் எஞ்சியிருக்கும் மாதங்களில் தமிழக அரசை கண்டித்து தொடர்ச்சியாக தமிழகம் தழுவிய அளவில் சமூக இடைவெளியுடன் போராட்டங்கள் நடத்துவது பற்றியும் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மக்களுடன் இன்னும் நெருக்கமான முறையில் பணியாற்றுவது பற்றியும் அறிவுரைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
சமரசம்
இதனிடையே தமிழகத்தின் பல மாவட்டங்களில் உட்கட்சிப் பிரச்சனை தீவிரம் அடைந்துள்ளதால் அதற்கு தீர்வு காணும் வகையில் மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் நாளை ஆலோசிப்பார் என்றும், புகார்களின் மீது விளக்கம் கேட்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. காணொலி ஒருங்கிணைப்பு குழு இன்று காலை முதலே மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.