வாக்குகள் குறைந்தால் பதில் சொல்லியாக வேண்டும்! திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஸ்டாலின் வார்னிங்
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும். எல்லா தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் இருக்க வேண்டும்" என்று பேசினார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. காணொலி வாயிலாக நண்பகல் 12.30 மணியளவில், முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாடு நலனே முக்கியம் என்று:
* நம்முடைய கூட்டணிக் கட்சியினர் தோளோடு தோளாக நீண்டகாலமாக கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள். அதனால் நட்புணர்வோடு கலந்து தொகுதிப் பங்கீடு செய்திருக்கிறோம். சில தொகுதிகளைப் பெற்று சில தொகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம். பலம் வாய்ந்த பெரிய கூட்டணியில் இது இயல்பானது.
* தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம். நாட்டோட எதிர்காலம்தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.
* மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் அவரவர் மாவட்டங்களைச் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளைக் கூடுதலாக பெற்று தரும் பொறுப்பு சாரும்.
எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும்:
* ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் அதற்கு அந்த மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சரும்தான் பொறுப்பு.
* தொகுதி மட்டுமில்லாமல் தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய – நகரம் - பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன்.
* எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை இப்பவே சொல்லி விடுறேன். இதை ரொம்ப கண்டிப்போடவும் சொல்லுறேன்.
அரவணைத்து செல்லுங்கள்:
* எல்லா தொகுதியிலயும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும்.
* தோழமைக் கட்சிகளையும் இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும்.
* போஸ்டர்கள், துண்டறிக்கைகளில் அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் படங்களுக்கும் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும்.
* வேட்பாளர் யாராக இருந்தாலும் அரவணைத்து மக்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.
* வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பதுதான் ரொம்ப முக்கியம்! மக்களை நேரடியா சந்திக்க வேண்டும்.
* இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால்தான், தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவர முடியும்.
வெற்றி செய்தியோடு என்னைச் சந்தியுங்கள்:
* இந்தியா கூட்டணி பெறப்போகும் வெற்றி சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான கருத்தியல்களை தமிழ்நாட்டில் விதைக்கலாம் என்ற எண்ணமே, இனிமே பாசிச வெறிபிடித்த பா.ஜ.க.வுக்கு கனவிலேயும் வரக்கூடாது. அப்படிப்பட்ட மாபெரும் வெற்றியை நாம் பெற வேண்டும்.
* புதுவை உட்பட 40 தொகுதிகள்லயும் நாம தான் வெற்றி பெற போகிறோம் என்பது உறுதி!
* ஜூன் 4-ஆம் தேதி வெற்றிச் செய்தியோட வந்து என்னைச் சந்தியுங்கள்!.. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
லோக்சபா தேர்தல்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது, இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிட்ட திமுக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. கூட்டணிக்கு போக மீதமுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. இதேபோல், திமுக தனது தேர்தல் அறிக்கையையும் இன்று வெளியிட்டது. இன்று காலை 10 மணிக்கு திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications