10+1 டீலிங்.. ஸ்டாலின் கொடுத்த ஆஃபர்.. ஓகே சொன்ன பிரேமலதா! விஜயகாந்தே செய்யாதது! எடப்பாடிக்கு ஷாக்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இருந்து கிட்டத்தட்ட விலகிவிட்டது தேமுதிக. திமுக தரப்பில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி, மற்றும் 2026 தேர்தலில் 10 சீட்டுகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் இருந்தவரை திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்ற தேர்தல் இரு தலைவர்களுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தன் மீதான தொடர் தோல்வி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறார்.
இரண்டாவதாக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இதுவரை அடுத்தடுத்து இருமுறை திமுக ஆட்சி அமைத்ததில்லை என்ற குறையை போக்க தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

அதிமுக - திமுக
தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி கட்சிகள் இல்லாமல் பிரதான கட்சிகளான அதிமுக - திமுக வெற்றி பெற முடியாது என்ற சூழல் நிலவுகிறது. திமுகவை பொருத்தவரை அக்கட்சியின் கூட்டணி மிக வலுவானதாக இருக்கிறது. 2019 தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணி உருவான நிலையில் அதில் இருந்த கட்சிகள் தற்போது வரை தொடர்கின்றன. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் சில அமைப்புகள் திமுக கூட்டணிக்கு பக்கபலமாக இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி
மறுபுறம் அதிமுகவில் கூட்டணி வலுவானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பாஜக அதிமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அமைந்திருக்கும் நிலையில், பாஜகவோடு கடந்த காலங்களில் கூட்டணி அமைத்திருந்த ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஜான்பாண்டியன் மக்கள் முன்னேற்ற கழகம், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் சேரலாம் என கூறப்படுகிறது. பாமகவும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என சொல்லப்படுகிறது.
தேமுதிக
இந்த நிலையில் தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு நடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் எம்பி சீட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியில் இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் கிட்டத்தட்ட அதிமுக கூட்டணியை விட்டு விலகி விட்டார் என்று சொல்லப்படுகிறது.
தேமுதிக
மேலும் திமுகவுடன் மறைமுக கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது என்கின்றனர் தேமுதிக வட்டாரத்தினர். மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தராத நிலையில் கடந்த மாதமே திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் தொடங்கியதாகவும், அதன் வெளிப்பாடாகத்தான் முதலமைச்சர் ஸ்டாலினை பிரேமலதா நேரில் சந்தித்து பேசினார் என சொல்லப்படுகிறது.
விஜயகாந்த்
மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 10 சட்டமன்ற தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் எனவும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தருவதாக திமுக தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தேமுதிக நிறுவனரும் பிரேமலதாவின் கணவருமான விஜயகாந்த் திமுகவை எதிர்த்து தான் கட்சி தொடங்கினார். முதன்முறையாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்தார். ஆனால் விஜயகாந்த் இருந்தவரை திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications