ஒரே நாளில் 3 கட்சிகளுடன் திமுக ஆலோசனை.. மதிமுக, விசிக, முஸ்லீம் லீக் கட்சிகளுடன் நாளை பேச்சு
சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள 3 கட்சிகளுடன் இன்று திமுக தலைமை ஆலோசனை நடத்தியது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நேற்று காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டது. அதன்படி அக்கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இன்று 3 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளுடன் திமுக தேர்தல் குழு ஆலோசனை நடத்தியது. இதில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது தங்களுக்குத் தேவையான தொகுதிகள் குறித்த பட்டியலை அக்கட்சியினர் கொடுத்தனர்.
அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் குழுவினர் சுப்பராயன் தலைமையில் கலந்து கொண்டனர். இவர்களும் தங்களுக்குத் தேவையான தொகுதிகள் குறித்த பட்டியலை திமுக தலைமையிடம் கொடுத்து விட்டு வந்தனர்.
இதையடுத்து கடைசியாக மனித நேய மக்கள் கட்சி குழுவினர் அக்கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளால் அண்ணா அறிவாலயம் களை கட்டியிருந்தது. திமுக சார்பில் துரைமுருகன் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது.
நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் 3 தொகுதிகளை ஒதுக்க அந்த கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மதிமுக-வுடனும் நாளை பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.