ஓய்வெடுக்க சொகுசு வேன் இல்லை! போட்டோ ஷூட் இல்லை! சாலையோரம் தூங்கி குமரி அனந்தன் நடத்திய பாதயாத்திரை!
சென்னை: என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி வரும் நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்னர் 15 பேருடன் குமரி அனந்தன் நடத்திய பாதயாத்திரை குறித்த ஃபிளாஷ்பேக்கை பகிர்ந்துள்ளார் திமுக பொறியாளர் அணி செயலாளர் எஸ்.கே.பி. கருணா.
85 வயதில் குமரி அனந்தன் நடத்திய அந்த நடைபயணம் தான் "நிஜமான நடைபயணம்" என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக எஸ்.கே.பி. கருணா பகிர்ந்துள்ள ஃபிளாஷ்பேக் வருமாறு;

''2016 ஜனவரி ஒன்று. சென்னையில் கழகத் தலைவரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்று ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். மதுராந்தகம் அருகில் பத்து பதினைந்து பேர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களைக் கடக்கும்போது கவனித்ததில் ஐயா குமரி அனந்தன் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார்.''
''உடனே காரை இருந்து இறங்கி அவரைப் பார்த்து வணங்கி வாழ்த்து பெற்றேன். சில மணி நேரம் அவருடன் நடந்தேன். அப்போது அவருக்கு வயது 85. சென்னையில் இருந்து குமரி வரை நடந்தே செல்கிறார். பின்னால் ஒரு சிறு வாகனத்தில் அவர்களின் உடமைகளும், பதாகைகளும் வந்தது. நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, அது "நிஜமான நடைபயணம்".
''இப்போது அதை நினைத்துப் பார்க்கிறேன். தன்னை அத்தனை வருத்திக் கொண்டு அவர் நடந்து சென்றதில் அவருக்கு எந்த அரசியல் ஆதாயமும் இல்லை. பெரும் அதிகார மையங்கள் அதை தொடங்கி வைக்கவில்லை. வழியெங்கும் ஆர்ப்பாட்டமான வரவேற்புகள் இல்லை. குரான், பைபிள் பரிசளிப்பு போன்ற செட்டப்புகள் இல்லை. தமிழ்நாட்டின் மொத்த ஊடகங்களும் முழுநேரம் அதை பின் தொடரவில்லை.''
''ஆனாலும் ஒரு மனிதன் தன்னுடைய நம்பிக்கையை, சமூகத்தின் பாற்கொண்ட அக்கறையை தனது ஆசான் மகாத்மா காந்தியின் வழியில் வெளிப்படுத்தினார். அத்தகைய மனிதர்களை அங்கீகரித்து பின்பற்றிட ஒட்டுமொத்தச் சமூகமாக நாம் தவறி இருக்கிறோம். 'குமரி அனந்தன்' களை காங்கிரஸ் கட்சி தவற விட்டதால்தான் சங்பரிவார்கள் எழுச்சி பெற்றனர்.''

''மகாத்மாவை நாடு மறந்ததால்தான் கோட்சேக்களிடம் ஆட்சி அதிகாரம் சிக்கியது. சாதி, மதங்கள் வெறியாக மாறிட அனுமதித்ததின் விளைவாகதான் நாட்டின் பன்முகத்தன்மையே கேள்விக்குறி ஆகியுள்ளது.நாடே மதிக்கத்தக்கச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெறும் சாதிச் சங்கங்களின் அடையாளத் தலைவர்களாக குறுக்கப்பட்டனர். ''
''காந்தியும், காமராஜரும் அரசியல் புரோக்கர்களின் அடையாளச் சின்னமாக மாற்றப்பட்டனர். நாட்டின் இன்றைய நிலைக்கு ஒரு கூட்டுச் சமூகமாக நாம் அனைவருமேதான் பொறுப்பு. நாம் அனைவருமே சேர்ந்து தோண்டிக் கொண்ட படுகுழி இது. நாம் அனைவரும் இணைந்தேதான் மேலேறி வந்தாக வேண்டும்.''












Click it and Unblock the Notifications