குவைத்தில் வேலை! நாமக்கல் பெண்ணை ஏமாற்றிய போலி ஏஜெண்ட்கள்! மீட்டு அழைத்து வந்த திமுக நிர்வாகி!
சென்னை: வெளிநாட்டு வேலை மோகத்தில் போலி ஏஜெண்ட்களிடம் பணத்தை பறிகொடுத்துவிட்டு துபாயில் தவித்த நாமக்கல் பெண்ணை, திமுக அயலக அணி நிர்வாகி எஸ்.எஸ்.மீரான் பத்திரமாக மீட்டு அழைத்து வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.
குவைத்தில் கைநிறையச் சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாக கூறிய போலி ஏஜெண்ட்களின் ஆசை வார்த்தைகளை நம்பி அவர் இந்த சிக்கலில் சிக்கியிருக்கிறார்.
இது தொடர்பான பின்னணியை இங்கே பார்க்கலாம்;

நாமக்கல் பெண்
நாமக்கல்லைச் சேர்ந்த திருமணி என்பவரின் மகள் கலைச்செல்வி கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார். கொரோனா பரவலைத் தொடர்ந்து, தொழில் சரிவர நடைபெறாமல் கடுமையான பொருளாதார பிரச்சனை ஏற்பட்டு, மன உளைச்சலுக்கு உள்ளானார். இதனால் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தபோது, குவைத்தில் இருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்தபா என்பவர், கலைச்செல்வியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உள்ளார். குவைத்தில் வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலை
அதனைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த சபீக் மூலம் திருச்சியிலிருந்து குவைத்துக்கு நேரடி விமானத்தில் அனுப்பி வைப்பதாக கூறி, முதலில் திருச்சிக்கு வரவழைத்து, பின்னர் கொச்சின் எனச் சொல்லி அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். கொச்சிக்கு சென்றதும், முதலில் துபாய்க்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து குவைத் செல்லலாம் எனச் சொல்லி உள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கலைச்செல்வி, தான் வேலைக்கு வரவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார்.

திமுக அயலக அணி
ஆனால், "வராவிட்டால் ரூ.1.50 லட்சம் தர வேண்டும், இல்லாவிட்டால் போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவோம்" என மிரட்டி, டூரிஸ்ட் விசாவில் துபாய் அழைத்துச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து, பாஸ்போர்ட்டையும் பிடுங்கிக் கொண்டனர். இதனால், மிகுந்த துயரத்துக்குள்ளான அந்த பெண், கடுமையான முயற்சிக்குப் பின்னர் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவாணனனைத் தொடர்பு கொண்டு பேசி, " என்னைக் காப்பாற்றுங்கள்" எனக் கதறி அழுதார். உடனே சுற்றுலாத்துறை அமைச்சர், திமுக அயலக அணி நிர்வாகிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கிறார்.

முதல்வரிடம் வாழ்த்து
இதன் அடிப்படையில், அந்த பெண்ணைத் தொடர்புகொண்டு பேசிய வெளிநாடு வாழ் தமிழர்கள் இந்திய நலச்சங்கத்தின் அமீரகத் தலைவர் மீரான் அவரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார். பின்னர் சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்து, சில தினங்களுக்குள் பாஸ்போர்ட்டைப் பெற்று, தனது சொந்த செலவில் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து தமிழகம் திரும்பிய கலைச்செல்வி, தனது பெற்றோருடன் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது தனக்கு ஏதாவது பணி வாய்ப்புத் தருமாறு கலைச்செல்வி, முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications