சூடுபிடிக்கும் திமுக உட்கட்சித் தேர்தல்! கட்சியினர் வாக்குவாதம்! திகைத்து நின்ற அமைச்சர் எ.வ.வேலு!
சென்னை: திமுகவில் ஒன்றியச் செயலாளர் பதவிக்கான உட்கட்சித் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பல இடங்களில் திமுக நிர்வாகிகள் மத்தியில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளதால் சமாதானம் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள் அமைச்சர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையிலேயே திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வு நடந்துள்ளது.

உட்கட்சித் தேர்தல்
திமுகவில் ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர் பதவிகளுக்கான தேர்தல் வரிசையாக நடைபெற்று வருகிறது. ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பஞ்சாயத்து பலமாக இருக்கிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தயம், சங்கராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற ஒன்றியச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அமளிதுமளியானது. திமுக நிர்வாகிகளில் ஒரு தரப்பினர், கட்சிக்கு நேற்று வந்தவருக்கும் ஜால்ரா போடுபவர்களுக்கும் தான் பதவியா என ஆவேசம் காட்டினர்.

வசந்தம் கார்த்திகேயன்
நிர்வாகிகளை சமாதானப்படுத்த வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. எவ்வளவோ முயற்சித்தும் அது எடுபடவில்லை. இதையடுத்து நிகழ்விடத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விரைந்து சென்று என்ன பிரச்சனை என விசாரித்தார். எ.வ.வேலு வந்துவிட்டார், பேசி பிரச்சனையை முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை கண்டதும் இன்னும் ஒரு படி மேலாக குரலை உயர்த்தை வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர் நிர்வாகிகள்.

திகைத்து நின்றார்
ஒன்றியச் செயலாளர் தேர்தல் முறைப்படி நடக்கவில்லை எனக் கூறி அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையிலேயே திமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் திகைத்துப் போனார். இதையடுத்து ஒரு வழியாக பேசி நிலைமையை சுமூகமாக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் எ.வ.வேலு. அமைச்சரவையில் முக்கிய துறையை வைத்திருப்பவரும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவருமான எ.வ.வேலுவுக்கே இந்த நிலையா என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

பல இடங்களில்
மேற்கூறிய கள்ளக்குறிச்சி மாவட்ட பிரச்சனை ஒரு உதாரணம் தான். இதேபோல் பல மாவட்டங்களில் உட்கட்சித் தேர்தல் பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது. ஆட்சிப் பணிகளில் என்னதான் பிஸியாக இருந்தாலும் கட்சிப்பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தி அன்றாடம் கேட்டறிந்து கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications