EDக்கும் பயப்பட மாட்டோம்.. மோடிக்கும் பயப்பட மாட்டோம்.. நாங்கள் அடிமை கட்சியல்ல.. உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: EDக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தப்பு செய்கிறவர்கள் தான் பயப்பட வேண்டும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் என்றும், மத்திய அரசின் மிரட்டலுக்கு அடிபணிய நாங்கள் ஒன்றும் அடிமை கட்சியல்ல என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு முடிவில், ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள், நிர்வாகிகள், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தப்பட்டது.

மோடி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு
இந்த சூழலில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்து வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இன்று மாலை பிரதமர் மோடியை பிரத்யேகமாகவும் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருப்பதாக விமர்சனங்கள் வைத்தன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்யப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தோம். சுணக்கமாக நடந்து வரும் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அடிமை கட்சியல்ல திமுக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் நிதி உரிமையை கேட்பதற்காக டெல்லிக்கு சென்றுள்ளார். எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யத்தான் செய்வார்கள். ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறோம். EDக்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்போம். மிரட்ட முயற்சித்தார்கள்.. மிரட்டி அடிபணிய வைப்பதற்கு திமுக அடிமை கட்சியல்ல.
பயம் கிடையாது
இது சுயமரியாதை கட்சி. தப்பு செய்கிறவர்கள் தான் பயப்பட வேண்டும், நாங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பயன்படும் வகையில் கபடி, பாக்ஸிங் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு சேர்த்து புதிய மல்டி ஸ்போர்ட்ஸ் மைதானப் பணிகள் டிசம்பர் மாதத்தில் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications