"சித்ரா தேவி.. ஷர்மிளா காந்தி.. இந்த திமுக இப்படியா கொச்சைப்படுத்துவது".. கொந்தளிக்கும் ஓபிஎஸ்..!
திமுக பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் குறித்து ஓபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: மகளிர் இட ஒதுக்கீட்டையே கொச்சைப்படுத்தும் நோக்கில் திமுகவினர் செயல்பட்டு கொண்டிருப்பதற்கும், கவுன்சிலர்களின் கணவர்களின் அராஜகங்கள் குறித்தும் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுகவும் சரி, அதிமுகவும் சரி, எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் உள்ளாட்சியில் பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருப்பதாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இதற்கு இரு கட்சிகளுமே விலக்கல்ல.. தற்போது திமுக ஆட்சியில் இது மீண்டும் வெளிவந்துள்ளது.. 10 வருடம் ஆட்சி இல்லாமல் திமுக அரியணை ஏறியுள்ளதால், இது சற்று அதிகமாக காணப்படுகிறது.

கனிமொழி
இப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், முதல்வர் ஸ்டாலினும், எம்பி கனிமொழியும் புதிதாக பதிவியேற்ற பெண் கவுன்சிலர்கள், மேயர்களுக்கு அறிவுரை தந்திருந்தனர்.. ஆனால், இன்னும் மாமன்ற கூட்டமே ஆரம்பிக்கவில்லை.. அதற்குள் சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன.. வழக்கம்போல் எதிர்க்கட்சிகளும் இதை விமர்சிக்க ஆரம்பித்து விட்டன.. அந்த வகையில், திமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்து, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்:

கொந்தளிப்பு
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அரசு அதிகாரிகளும், துறை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் மிரட்டப்பட்டும், தாக்கப்பட்டும் வந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தினரின் ஆதிக்கம், அராஜகம், அட்டகாசம், அடக்குமுறை தமிழ்நாடு முழுவதும்கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது.

ஷர்மிளா காந்தி
மகளிருக்காக ஒதுக்கப்பட்ட 34-வது வார்டிலிருந்து சென்னை மாநகராட்சிக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சர்மிளா காந்தி. இவர் தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து தன்னுடைய இருக்கையில் தனது கணவரை அமர்த்தி, அவர்மூலம் வீடு கட்டும் உரிமையாளர்களை கூப்பிட்டு மிரட்டும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றது.

இளைஞர் அணி செயலாளர்
இதேபோல், தாம்பரம் மாநகராட்சிக்கு 31-வது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம். சித்ரா தேவி என்பவரின் மைத்துனரும், திருநீர்மலை தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளருமான எச். தினேஷ் என்பவர் தி.மு.க.வினருடன் நேற்று மாலை ஓர் உணவுக் கடைக்குச் சென்று அந்தக் கடை உரிமையாளரிடம் 10,000 ரூபாய் கேட்டதாகவும், ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் தர வேண்டுமென்று மிரட்டியதாகவும், அதற்கு அந்த உரிமையாளர் முதலில் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

பதற்றம்
பின்னர் கடைக்குள் அசம்பாவிதம் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக 3,000 ரூபாயை 'கூகுள் பே' மூலமாக அனுப்பியதாகவும், இதனைத் தொடர்ந்து 7,000 ரூபாயை இரவுக்குள் தருமாறு மிரட்டியதாகவும், அதற்கு அந்தக் கடையின் உரிமையாளர் மறுத்ததையடுத்து, அந்தக் கடை தி.மு.க.வினரால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், 'கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் பதற்றத்துடன் வெளியே ஓடிச் சென்றதாகவும், இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் காவல் துறையினர் இருவரை கைது செய்துள்ளதாகவும் இன்று பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

ஆணாதிக்கம்
மேற்கண்ட சம்பவங்களிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதும், ஆணாதிக்கம் கொடிகட்டி பறப்பதும் தெள்ளத் தெளிவாகிறது. மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதே ஆணாதிக்கத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், மகளிர் இட ஒதுக்கீட்டையே கொச்சைப்படுத்தும் நோக்கில் தி.மு.க.வினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வியாபாரிகள்
இதேபோல், தி.மு.க.வினரின் வசூல் வேட்டையைப் பார்த்து வீட்டு உரிமையாளர்களும், வியாபாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர். தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அராஜகச் செயல்களுக்கு அனைத்திந்திய அண்ணா நிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஓபிஎஸ்ஸின் இந்த அறிக்கை திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications