அறிவாலயம் டூ கமலாலயம்... பாஜகவில் இணைகிறாரா கே.பி.ராமலிங்கம்..?
சென்னை: திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்தை விரைவில் பாஜகவில் இணைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன்.
திமுகவில் விவசாய அணி செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த கே.பி.ராமலிங்கத்தை கட்சியில் இருந்து கடந்த மாதம் நீக்கினார் மு.க.ஸ்டாலின். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையற்றது என கருத்து தெரிவித்து சர்ச்சையை உருவாக்கினார் கே.பி.ராமலிங்கம்.
முதற்கட்டமாக அவரிடம் இருந்த பதவியை மட்டும் பறித்த ஸ்டாலின், அது தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தார். அதில், தனது கருத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என ராமலிங்கம் உறுதியாக நின்றதால் முரசொலியில் கட்டம் கட்டப்பட்டார். இதையடுத்து ராமலிங்கம் உடனடியாக பாஜகவில் இணையப் போகிறார் என்றும், மாற்றுக் கட்சியில் இணையாமல் அழகிரியுடன் இணைந்து ஸ்டாலினுக்கு குடைச்சல் கொடுப்பார் எனவும் வாட்ஸ் அப்களில் தகவல்கள் உலா வந்தன.
இந்நிலையில், திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமியை தொடர்ந்து கே.பி.ராமலிங்கத்தையும் பாஜகவில் இணைக்க முருகன் முயற்சி செய்து வருகிறார். ஆனால் கே.பி.ஆர். தரப்பில் வைக்கப்படும் டிமாண்ட்கள் முருகனை தலை சுற்ற வைத்திருக்கிறது. இருப்பினும் ராமலிங்கத்தை பாஜகவில் இணைத்து தனது ஆளுமையை கட்சியின் தேசியத் தலைமைக்கு மீண்டும் நிரூபிக்க முருகன் முயற்சித்து வருகிறார்.
ஜெ. தீபா... திடுதிப்பென குதித்த வாரிசு.. மி(தி)ரண்ட தொண்டர்கள்... காலநதியில் காணாமல் போன பரிதாபம்
இதனிடையே மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான கே.பி.ராமலிங்கம் இது தொடர்பாக அவரிடம் பேசியிருக்கிறார். அவரோ அவசரம் வேண்டாம் கொரோனா பதற்றம் தணியட்டும், பொறுமையாய் இரு பார்த்துக்கொள்வோம் எனக் கூறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், எல்.முருகன், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் ஆகிய மூன்று பேரும் ஒரே மாவட்டத்தை (நாமக்கல்) சேர்ந்தவர்கள்.