ஊட்டியில் "அன்று" ஸ்டாலின் கேட்ட கேள்வி! வாக்குறுதியை நிறைவேற்றிய திமுக! 6 பேர் விடுதலையானது எப்படி?
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திமுக கொடுத்த வாக்குறுதி ஒன்றை முழுமையாக நிறைவேற்றி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நளினி அவரது கணவர் முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலையை அடிப்படையாக வைத்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

விடுதலை
நளினி உள்ளிட்டோர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கினர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனக்கான தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளது. 142வது சட்ட பிரிவை பயன்படுத்தி இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரை செய்தது.

பேரறிவாளன்
இந்த பரிந்துரையில் ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஆளுநர் இப்படி காலம் தாழ்த்தியது தவறு என்று சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் விடுதலையை செய்து உள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றியது.

ஆளுநர்
ஆனால் இதில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது தவறு. சட்டப்படி அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் ஏற்பதுதான் வேலை. ஆனால் அதை ஆளுநர் செய்யாமல் இருக்கிறார். அமைச்சரவை முடிவை ஏற்பதே சரியானது. இதனால் உச்ச நீதிமன்றம் இதில் முடிவு எடுக்க வேண்டும் அல்லது ஆளுநர் அமைச்சரவை முடிவை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று வாதம் வைத்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் இந்த வழக்கில் வாதங்கள் சூடு பிடித்தன.

வழக்கு வாதம்
இதே வாதங்களின் அடிப்படையில்தான் பேரறிவாளன் கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்டார். தற்போது அதே அடிப்படையில் மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திமுக கொடுத்த வாக்குறுதி ஒன்றை முழுமையாக நிறைவேற்றி உள்ளது. திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி 494ல், ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் வாடிடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை பெற்றிட அனைத்து முயற்சிகளையும் கழக அரசு முழு முனைப்புடன் மேற்கொள்ளும், என்று குறிப்பிட்டு இருந்தது.

7 பேர்
அதன்படியே தற்போது பேரறிவாளன் மற்ற 6 பேர் என்று 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட 4 நாட்கள் கழித்து முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் இருந்தபடியே இது தொடர்பாக ஆலோசனை செய்தார். மற்ற 6 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்தார். உயர் அதிகாரிங்கள், டாப் லெவல் சட்ட வல்லுனர்கள், சீனியர் வழக்கறிஞர்கள் இந்த சந்திப்பில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர்.
இதில் என்ன மாதிரியான வாதங்களை வைக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதன்படியே தமிழ்நாடு அரசு வைத்த வாதம் காரணமாக இந்த வழக்கில் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.











Click it and Unblock the Notifications