திமுக செயற்குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. துரைமுருகன் அறிவிப்பு! என்ன காரணம்?
சென்னை: வரும் 18 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வரும் டிசம்பர் 18ஆம் தேதி, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் நமது கழக உறுப்பினர்கள் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், 18.12.2024 அன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெள்ளமும் பல இடங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிசம்பர் 18-ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், டெல்லியில் நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.பிக்கள் முக்கிய விவாதங்களில் பங்கேற்பதால் சென்னைக்கு வர முடியாத சூழல் உள்ளதாலும் வரும் 18ம் தேதி நடைபெற இருந்த திமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications