திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சகோதரர் காலமானார்! தம்பியிடம் உதவி என்று வாய்திறக்காத அண்ணன்!
சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் அண்ணன் துரை மகாலிங்கம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
Recommended Video
தம்பி துரைமுருகன் அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக ஜொலித்தாலும் அவரிடம் அது வேண்டும் இது வேண்டும் என ஒருமுறை கூட கேட்காதவர் துரை மகாலிங்கம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள காங்குப்பத்தில் வசித்து வந்த அவரை, துரைமுருகன் தான் அண்மையில் சென்னை ரேலா மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ சிகிச்சைக்கான செலவை கவனித்துக்கொண்டார்.

திமுக பொதுச்செயலாளர்
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தம்பி உள்ளனர். துரைமுருகனும் அவரது தம்பி துரை சிங்காரமும் ஒன்று சொன்னது போல் முகச்சாயலில் இருப்பதோடு அவர்கள் இருவரும் அரசியலிலும் பயணித்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் மூத்த சகோதரரான துரை மகாலிங்கம் கடைசி வரை விவசாயத்தை மட்டுமே கவனித்துக்கொண்டு காட்பாடி அருகில் உள்ள காங்குப்பத்திலேயே வசித்து வந்தார்.

குடும்பக் கஷ்டம்
ஆரம்பக்காலங்களில் குடும்ப கஷ்டப்பட்ட போதெல்லாம் தம்பி துரைமுருகனுக்கு பாக்கெட் செலவுக்கு பணம் கொடுத்து உதவியிருக்கிறார் துரை மகாலிங்கம். திமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ள இவர், தனது தம்பி அமைச்சர், பொதுச்செயலாளர் என்ற பெரிய பதவிகளில் இருந்தும் அவரிடம் இதுவரை உதவிக்கேட்டு சென்றதில்லையாம். இப்போது கூட உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவரை, துரைமுருகன் தான் வம்படியாக சென்னைக்கு அழைத்து வந்து குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டிருக்கிறார்.

அப்பா ஸ்தானம்
தனக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்த மூத்த அண்ணன் மறைவால் துரைமுருகன் மிகுந்த துயரத்தில் இருக்கிறாராம். துரைமகாலிங்கத்தின் உயிர் பிரிந்துவிட்ட செய்தியறிந்ததும் தன்னையறியாமல் அழத் தொடங்கியவாறு காரில் மருத்துவமனை புறப்பட்ட துரைமுருகன், ஆரம்பக்காலங்களில் அண்ணன் தனக்கு எப்படியெல்லாம் உதவினார் என்பதை உடன் இருந்தவர்களிடம் அசைபோட்டிருக்கிறார்.

முதல்வர் அஞ்சலி
இதனிடையே சொந்த ஊரான காட்பாடி காங்குப்பத்தில் துரைமுருகனின் அண்ணன் துரை மகாலிங்கத்துக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இதனால் தமிழகமெங்கும் உள்ள துரைமுருகனின் ஆதரவாளர்கள் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். முன்னதாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனைக்கு விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின் துரைமகாலிங்கம் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications