2 எம்பிக்கள்.. 1 அமைச்சர்.. முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த திடீர் தலைவலி.. அவசரமாக நடந்த திமுக மீட்டிங்?
சென்னை: தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கியமான நலத்திட்ட பணிகள், எதிர்க்கட்சி மீதான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு தேவையில்லாத மூன்று தலைவலிகள் தற்போது ஏற்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்ததில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் இரண்டு விதமான நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஒரு பக்கம் நலத்திட்டங்களை நிறைவேற்றுவது, மறு பக்கம் கொரோனாவை கட்டுப்படுத்துவது. இதில் தமிழ்நாடு அரசு நன்றாகவே செயல்பட்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி உள்ளது. இன்னொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான முறைகேடு புகார்கள், வழக்குகளை திமுக தீவிரமாக விசாரித்து வருகிறது.

கோடநாடு
எஸ்பி வேலுமணி உள்ளிட்ட மாஜி அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு. பல ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 5 தனிப்படை அமைத்து விசாரணை என்று தமிழ்நாடு அரசு பல்வேறு புகார்கள் மீதான விசாரணைகளையும் துரிதப்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் திமுகவில் இருக்கும் மூன்று முக்கியமான நபர்களுக்கு எதிராக தற்போது பரபரப்பு புகார்கள் வைக்கப்பட்டுள்ளன.

விமர்சனம்
பெரிதாக விமர்சனம் இல்லாமல் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் ஆட்சிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் மூன்று சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து உள்ளன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோவிந்தராஜ் என்ற நபர் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திமுக எம்பி டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் இவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதனால் திமுக எம்பி டிஆர்வி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

மர்மம்
எம்பி டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான டிஆர்வி முந்திரி ஆலையில் கோவிந்தராஜ் கடந்த 6 வருடமாக பணியாற்றி வந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் மரணம் அடைந்தார். இந்த நிலையில் இந்த கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. கடலூர் எம்பி ரமேஷ் மற்றும் முந்திரி தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் 5 பேர் மீது சிபிசிஐடி கொலை வழக்கு உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் எம்பி ரமேஷ் தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் கிளை சிறைச்சாலையில் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக
திமுக ஆட்சியில் இருக்கும் நிலையில் எம்பிக்கு எதிராக வைக்கப்பட்டு இருக்கும் இந்த குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் பா.ஜ.க நிர்வாகியை தாக்கியதாக தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்கிணறு விலக்கில் ஹோட்டல் ஓன்றில் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் என்பவர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவரது ஆட்கள் பாஸ்கரனை தாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

சிசிடிவி
இதனால் ஞானதிரவியம் மற்றும் அவரது மகன்கள் 2 பேர் உள்பட 30 பேர் மீது பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஸ்கரனை தாக்கிவிட்டு ஹோட்டலில் இருந்த கேமராக்களையும் ஞானதிரவியம் ஆட்கள் உடைத்து சென்று விட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் தாக்கப்பட்ட பாஸ்கரனை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அதோடு நெல்லையில் பொன் ராதாகிருஷ்ணன் திமுகவிற்கு எதிராக தர்ணா போராட்டம் மேற்கொண்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் திமுக மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.

தலைவலி
எம்பி ஒருவருக்கு எதிராக வைக்கப்பட்டு இருக்கும் இந்த புகார் திமுக தரப்பிற்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு எம்பிக்கள் இப்படி புகாரில் சிக்கி இருக்க இன்னொரு திமுகவின் இன்னொரு அமைச்சரும் விசாரணை வளையத்தில் இருக்கிறார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அமலாக்கத்துறை மூலம் குறி வைக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சியின் கீழ் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி 33 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக 2.8 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தற்போது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வழக்கு நிலுவை
இந்த வழக்கில் அடிப்படையில் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறையும் கடந்த சில வாரங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்தது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி இவருக்கு எதிராக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த விசாரணைக்கு ஆஜராவதை தவிர்க்கும் வகையில் செந்தில்பாலாஜி காரணங்களை குறிப்பிட்டு வருகிறார்.

சேகர் ரெட்டி
அதேபோல் சேகர் ரெட்டி டைரியில் செந்தில்பாலாஜி பெயர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக செந்திலாபாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 16 பேருக்கு இந்த நோட்டீஸ் சென்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் செந்தில் பாலாஜி மீதான புகார்களும் ஒரு பக்கம் திமுகவிற்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

ஆலோசனை
இதையடுத்தே நேற்று முதல்வர் ஸ்டாலின் திமுக மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் திமுக எம்பி டிஆர்வி ரமேஷ் மீதான புகார் குறித்து மட்டும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அவரின் வழக்கில் தொடர்புடைய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அடுத்து அவர் கைதாக வாய்ப்புள்ளது. இதனால் கட்சி ரீதியாக என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications