விசிக 6.. மநீம 3..? இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தும் திமுக.. பெரும் எதிர்பார்ப்பு!
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே சென்னை அறிவாலயத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மேலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் இன்று திமுக குழு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு, கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 2 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி (ஐயூஎம்எல்), மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகிய கட்சிகளுடன் திமுக குழுவினர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி சீட் ஷேரிங்கை முடித்தனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த தொகுதி பங்கீடு குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தானது. முஸ்லீம் லீக் ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளது.
இந்நிலையில், இன்று விசிக மற்றும் மநீம கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக. விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி தலைமையிலான குழுவினர் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் கேட்டு திமுகவுக்கு விசிக நெருக்கடி கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சீட் முக்கியமல்ல; குறைவான இடங்கள் கொடுத்தாலும் சண்டையிட்டுக் கூடுதல் இடங்களைக் கேட்போமே தவிர, கூட்டணியை விட்டு விலக மாட்டோம் எனக் கூறியிருந்தார் திருமாவளவன்.
2021 சட்டமன்றத் தேர்தலில் விசிக திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு, 14 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை கூட்டணியில், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் புதிதாக இடம்பெற்றுள்ளதால், விசிக-வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டசபை தேர்தலில் முதல் முறையாக கூட்டணியில் இணைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்து திமுகவுடன் மக்கள் நீதிமய்யம் கட்சியும் பயணித்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் அக்கட்சிக்கு 3 சீட்கள் வழங்கப்படலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications