இறங்கி வரும் திமுக.. விசிகவுக்கு எத்தனை சீட்? நாளை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாம்!
சென்னை: லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக விசிக இடையே நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நாளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு விசிகவுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. விசிகவுடன் நாளை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லீம் லீக், கொமதேக ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. புதிதாக மக்கள் நீதி மய்யம் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் இதுவரை: திமுக கூட்டணியில் இதுவரை 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது திமுக.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை நேற்று திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அதைத்தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த மக்களவைத் தேர்தலைப் போல், இரு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இந்த இரு கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து விவரங்கள் இனி பேச்சுவார்த்தை மூலம் முடிவு எடுக்கப்படும் என இரு கட்சித் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். மற்ற கூட்டணி கட்சிகள் உடன் சீட் பகிர்வு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி சென்ற முறை ஒதுக்கிய 2 தொகுதிகளுடன் சேர்த்து 1 பொது தொகுதியைக் கூடுதலாக ஒதுக்கச் சொல்லி கேட்கிறது. ஆனால், கடந்த முறையைப் போலவே 2 சீட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறி வருகிறது திமுக தரப்பு. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், விசிகவை நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது திமுக. விசிக உடனான தொகுதிப் பங்கீடு குறித்த, 2ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதில் விசிக குழுவினரோடு, திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
நாளை மீண்டும் பேச்சுவார்த்தை: விசிகவின் கோரிக்கையை, திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் ஸ்டாலினின் தெரிவித்துள்ளதாகவும், ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது. எனவே, நாளை விசிக உடன் சீட் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடு ஒப்பந்தம் உடனே கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications