செம ஹேப்பி.. செம உற்சாகம்.. செம நம்பிக்கை.. வேற யாரு.. திமுகதான்!
சென்னை: ஐந்து மாநிலத் தேர்தல் முடிவால் காங்கிரஸ் சந்தோஷமாக இருக்கிறதோ இல்லையோ, திமுக மிகப் பெரிய உற்சாகத்தில் மூழ்கியுள்ளது. காரணம் இந்த அலை, தமிழகத்திலும் எதிரொலிக்கும், திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்.
இந்தத் தேர்தல் முடிவால் தமிழகத்தில் அதிமுக, பாஜக, ரஜினி என அத்தனை பேரும் ஒரு சேர வீழ்த்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் திமுக தரப்பில் வந்துள்ளது. மோடி அலை வீழ்த்தப்பட்டுள்ளதை தனக்கு சாதகமாக திமுக பார்க்கிறது.
அதேபோல மத்தியில் பாஜக வீழ்ந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது தனக்கு மிகப் பெரிய சாதகம் என்ற திமுகவின் எண்ணமும் இந்த உற்சாகத்திற்கு இன்னொரு முக்கியக் காரணம். எனவேதான் இந்த ஐந்து மாநிலத் தேர்தல் வெற்றியை திமுக முக்கியமாக பார்க்கிறது.
மாபெரும் வெற்றி உறுதி
திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி இதுகுறித்துக் கூறுகையில் திமுக - காங்கிரஸ் இடையிலா உறவு வலுவாகியுள்ளது. எங்களுக்குள் இயல்பான உறவு நிலவுகிறது. தற்போதைய வெற்றி லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும். மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம் என்றார்.
சீட் பிரச்சினை வருமா
அதேசமயம், இந்த தேர்தல் வெற்றியால் லோக்சபா தேர்தலில் சீட் ஒதுக்கீட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தரப்பிலிருந்து நெருக்குதல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக இடங்களை காங்கிரஸ் கோரலாம். அதைக் கொடுக்க வேண்டிய நிலைக்கு திமுகவும் தள்ளப்படலாம்.
லாபம் யாருக்கு
ஆனால் இந்த விஷயத்தில் மறைந்த கருணாநிதி போல மு.க.ஸ்டாலினும் நீக்குப் போக்காக நடந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வெற்றியை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதே திமுகவின் முக்கிய நோக்கம் என்பதால்.
புத்துணர்வு
மொத்தத்தில் 5 மாநிலத் தேர்தல் வெற்றி காங்கிரஸுக்கு மட்டுமல்லாமல், தெலுங்கு தேசம், திமுக என முக்கிய எதிர்க்கட்சிகளுக்கும் கூட சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. தெலுங்கானாவில் கேசிஆர் அலையைத் தாண்டி வர முடியாது என்பதால் அங்கு பெற்ற தோல்வியைக் கூட தெலுங்கு தேசம்- காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம்.. திமுகவின் கணக்கு பலிக்குமா அல்லது ஏமாற்றுமா என்பதை.