கமல்ஹாசனை நாங்கள் சீரியஸாக கருதவில்லை.. அவர் பேச்சுக்கு கருத்து கூற விரும்பவில்லை- உதயநிதி ஸ்டாலின்
மதுரை: கமல்ஹாசனை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
திமுக சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். இருப்பினும் தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்து திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி அவர் பேசி வருகிறார்.
இன்று, மதுரை வந்திருந்த உதயநிதி ஸ்டாலினிடம் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் பேட்டிகண்டது.

சீரியசாக எடுக்கவில்லை
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும், மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை. நாங்கள் அவரை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவு பற்றி பேசுவோம்
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். ஜெயலலிதா மரணம் பற்றி பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது. ஆனால் அவர் முதல்வராக இருக்கும்போது மறைந்து உள்ளார். எனவே ஜெயலலிதா மறைவு குறித்து கண்டிப்பாக நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவோம் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

மதுரை வடக்கு தொகுதி
இதையடுத்து, மதுரை வடக்கு திமுக வேட்பாளர் தளபதியை ஆதரித்து திறந்தவெளி வேனில் அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதை பாருங்கள்: நிவர் புயல் கஜா புயல் என தொடர்ந்து சென்னையில் பெரிய வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் தமிழகத்திற்கு மோடி அரசு ஒதுக்கியது, ரூ 1000 கோடி மட்டும்தான். அதில் 500 கோடி இப்போது தேர்தல் நெருங்கி வரும்போது வழங்கியுள்ளனர்.

புதிய இந்தியாவை பார்த்தீர்களா
500, 100 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று இரவு எல்லோரும் தூங்கிய பிறகு அறிவித்தார் மோடி. இதன் மூலம், புதிய இந்தியா பிறக்கப்போகிறது என்று அப்பொழுதும் அவர் அறிவித்தார். யாராவது அந்த புதிய இந்தியாவை பார்த்தீர்களா.

நுழைவுத் தேர்வு
நுழைவு தேர்வு என்ற ஒன்று இருக்க கூடாது என்று கருணாநிதி அறிவித்தார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை நீட் நுழைவு தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் அதிகாரத்தில் இருக்கும்போது மோடி அரசு கூறுவதை கேட்டு நுழைவுத் தேர்வை கொண்டு வந்து விட்டனர். அனிதா உட்பட பல மாணவ மாணவிகள் இதனால் தற்கொலை செய்துள்ளனர். அடுத்தது, பி.ஏ., பிகாம், பிஎஸ்சி, நர்சிங் என எல்லாவற்றுக்கும் நுழைவு தேர்வு வரும். ஆனால் ஸ்டாலின் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications