“திமுக திரைக்கதையில் ராமதாஸ் நடிக்கிறார்”.. அதிமுக நிர்வாகி சேலம் மணிகண்டன் பேட்டி!
சென்னை: அன்புமணி அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், ராமதாஸ் இது சட்டவிரோதம் என விமர்சித்துள்ளார். இந்நிலையில் "ராமதாஸுக்கு திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் திமுக. ராமதாஸ் நடிக்கிறார். அவர் கட்சியை காவு கொடுத்துவிட்டார், சொந்த மகனையும், சொந்த சமூகத்தையும் காவு கொடுத்துவிட்டார்." என அதிமுக நிர்வாகி சேலம் மணிகண்டன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் பேசியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அவரது தமிழக வருகையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்தார். அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஆளுநரிடம் சமர்ப்பித்து நடவடிக்கை கோரினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பில் அதிமுக - பாமக இடையிலான தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "எங்கள் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இருக்கும் எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் சேர்க்கப்படும். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி." எனத் தெரிவித்தார்.
ஆனால், இந்த கூட்டணியை ஒரு நாடகம் என விமர்சித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். தானே அக்கட்சியின் நிறுவனர் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தன்னுடைய தலைமையில்தான் கூட்டணி குறித்து பேச முடியும் என்றும் தான் அமைக்கும் கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார். அன்புமணி கூட்டணி பேசியிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம் என ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த சேலம் மணிகண்டன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் பேசுகையில், "சொல் போனது, பல் போனவர்கள் தான் இப்போது ராமதாஸ் பின்னால் இருக்கிறார்கள். அவருடன் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து பேசிக்கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. ஆனால் அவரை அப்படியே விட்டு, அவர் திமுக பக்கம் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். ராமதாஸ் அதிமுக பக்கம் வந்தால் கிடைக்கும் பலனை விட, அவர் திமுக பக்கம் சென்றால் அவர் மூலமாக அதிமுகவுக்கு அதிக லாபம். அவர் திமுக பக்கம் சென்றால், அவரது உண்மையான முகத்தை ஒட்டுமொத்த வன்னியர் சமூக மக்களும் புரிந்துகொண்டு, அன்புமணி பக்கம் ஆதரவளிப்பார்கள்.
ராமதாஸ் என்ன சொன்னார்? 2024 தேர்தலிலேயே அதிமுக கூட்டணி தான் எனது விருப்பம் என்று சொன்னாரே. அவர் வர வேண்டியது தானே? அவருக்கு திரைக்கதை, இயக்கம் எல்லாம் திமுக. ராமதாஸ் நடிக்கிறார். அவர் கட்சியை காவு கொடுத்துவிட்டார், சொந்த மகனையும், சொந்த சமூகத்தையும் காவு கொடுத்துவிட்டார்.
ராமதாஸ் - அன்புமணி இடையே பிரச்சனை ஏற்பட்டபோதே ராமதாஸ் மீது பலரும் இரக்கப்பட்டனர். அதன் பிறகு நாளாக நாளாக ராமதாஸ் நடத்துவது நாடகம் எனப் புரியவந்தது. அன்புமணியையும், ராமதாஸையும் ஒன்றாக வைத்து கூட்டணியை உறுதி செய்வதுதான் அதிமுகவின் திட்டம். அதை எப்படியோ மோப்பம் பிடித்த திமுக, ராமதாஸுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து, அவரை இந்த பிரச்ச்னையை தீர்க்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது. ராமதாஸில் முகமூடி கிழிந்து ஸ்டாலினின் முகம் தெரிகிறது.
என் குடும்பத்தினர் யாரும் சட்டமன்றத்தையோ, பாராளுமன்ற வாசலையோ மிதிக்க மாட்டார்கள் என்றார். அப்படி நடந்து கொண்டாரா? வன்னியர் சமூக மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார். அன்புமணி மத்திய அமைச்சராக திறம்பட செயல்பட்டுள்ளார். அவரை நீங்களே இன்று பலி கொடுப்பது யாருக்காக?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications