போதைப்பொருள் சப்ளை செயினில் அதிமுக டாப் புள்ளிகள் தொடர்பாம்.. திமுக ஐடி விங் பரபர குற்றச்சாட்டு
சென்னை: "போதைப் பொருள் விவகாரத்தைப் பொறுத்தவரை, விசாரணையில் இன்னும் பல முக்கிய அதிமுக பிரமுகர்கள் சிக்க உள்ளனர். அதில் மிக முக்கியமானவர் ஒரு அரசியல் தலைவரின் வாரிசு" என திமுக ஐடி விங் தெரிவித்துள்ளது.
கடந்த 17-ம் தேதி இரவு சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை (38) கைது செய்தனர்.

சிக்கிய ஸ்ரீகாந்த்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவருக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரை ஓசூரில் கடந்த 18-ம் தேதி கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இவர்கள் போதைப்பொருள் சப்ளை செய்த பட்டியலில் நடிகர் ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார். இதையடுத்து நேற்று, ஸ்ரீகாந்த்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அவரிடம் ரத்த மாதிரி பெற்று மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவர் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்ரீகாந்த் கைது
இதையடுத்து ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீகாந்த் மட்டும் அல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் போதைப் பொருளை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்தும் போலீஸார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
விசாரணையில் ஸ்ரீகாந்த் பல்வேறு தகவல்களை கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தான் கொக்கைன் பழக்கத்தை கற்றுத் தந்தார். 'தீங்கிரை' என்ற படத்திற்காக பிரசாத் தனக்கு ரூ.10 லட்சம் தர வேண்டி இருந்தது. பணத்தைக் கேட்கும் போதெல்லாம் பிரசாத் கொக்கைன் வாங்கித் தருவார். 2 முறை பயன்படுத்திய பின்னர், 3-வது முறை நானே கொக்கைன் கேட்கும் நிலைக்கு அடிமை ஆகிவிட்டேன் என ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக மாஜி நிர்வாகி
போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், 8 முறை போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் அதிமுக ஐ.டி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. நுங்கம்பாக்கம் மதுபான பாரில் தகராறு, வேலை வாங்கித் தருவதாக மோசடி என மொத்தம் 5 வழக்குகளில் ஏற்கனவே கைதாகி குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் பிரசாத் உள்ளார்.
இந்நிலையில், அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் இந்த போதைப்பொருள் சப்ளை சங்கிலியில் முக்கிய நபராக இருப்பதால், மேலும் பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக ஐ.டி விங் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, அதிமுகவை கடுமையாக தாக்கி உள்ளது.
திமுக ஐடி விங் பரபர பதிவு
திமுக ஐடி விங், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் பெங்களூரில் பெரிய drug mafia உடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பதை அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த பிரதீப் என்பரே வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த இருவர் மூலமாக தான் போதைப் பொருள் பெற்றதாக நடிகர் ஶ்ரீகாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இந்த பிரசாத் திரைத்துறையில் யார் யாருக்கு எல்லாம் போதைப் பொருள் supply செய்துள்ளார் என்பதையும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த போதைப் பொருள் விவகாரத்தைப் பொறுத்தவரை, விசாரணையில் இன்னும் பல முக்கிய அதிமுக பிரமுகர்கள் சிக்க உள்ளனர். அதில் மிக முக்கியமானவர் டெண்டர் ஆசாமியின் புதல்வரும் மிதுனமான நபரும் ஆவார்.
அதிமுக கனெக்ஷன்
அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன், தற்போது கைதாகியுள்ள அதிமுக நிர்வாகி பிரசாத், குண்டாஸில் கைதான அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், இவர்கள் எல்லாம் ஒரு mafia என்று அதிமுகவின் ஆஸ்தான புரோக்கரே ஏற்கனவே பல இடத்தில் பேசியுள்ளார். ஆனால் அதில் அவர் மறைத்த ஒரு விசயம், இந்த போதைப் பொருள் கும்பலுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு அளித்ததே அந்த மிதுனமான நபர் என்பது தான்.
இந்த போதைப் பொருள் வியாபாரத்தில் வரும் பணம் மற்றும் முந்தைய ஆட்சியில் சம்பந்திக்கு டெண்டர் விட்டு அடித்த பணத்தையும் பிரசாத் மூலமாக சுற்றில் விட்டு அவரையே இணை தயாரிப்பாளராக நியமித்து தீங்கிரை எனும் படத்தை எடுத்துள்ளார். மேலும் இப்படத்தில் அஜய் வாண்டையாரின் மனைவியும் நடிகையுமான அபூர்வாவும் நடித்துள்ளார். இது வெளிப்படையான money laundering என்று தெரிந்தாலும் இவர்கள் மீது எல்லாம் CBI, IT, ED போன்ற அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஏனென்றால் பாஜகவுக்கு தேவை அதிமுக வாக்குகள், அதிமுகவுக்கு தேவை இரட்டை இலை சின்னம்.
ஒரு போதைப் பொருள் கும்பலையே கட்சிக்குள் வைத்துக் கொண்டு அதற்கு பொறுப்பும் பாதுகாப்பும் அளித்துக் கொண்டே சட்டம் ஒழுங்கு பற்றி அறிக்கை விடுகிறார் அடிமைச்சாமி." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications