ஆட்டம் ஆரம்பம்! புகுந்து விளையாடும் திமுக ஐடி விங்! பெருச்சாளிகளுக்கு ஆப்பு உறுதி! ராஜா எச்சரிக்கை!
சென்னை: திமுக அரசு மீதும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் அவதூறு பரப்புவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
ஐடி விங் ரிப்போர்ட்ஸ் என்ற பெயரில் இதற்காக தனி டீமை களமிறக்கியுள்ள டி.ஆர்.பி.ராஜா, முதல்வர் குறித்து அவதூறு பதிவுகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே வன்மம் கக்கும் பெருச்சாளிகள் இனி சிக்குவார்கள் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவாக வெளியிட்டு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

திமுக ஐடி விங்
திமுக ஐடி விங் மாநில செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. பொறுப்பேற்றது முதல் அந்த அணியில் பல அதிரடி மாற்றங்களை அரங்கேற்றி வருகிறார். செயல்படாத நிர்வாகிகளிடம் இருந்து பொறுப்புகளை பறித்து ஆர்வமுடன் சமூக வலைதளங்களில் இயங்கி வரக்கூடிய நபர்களுக்கு பொறுப்புகளை கொடுக்க தயாராகிவிட்டார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே திமுக ஐடி விங்கில் ஐடி விங் ரிப்போர்ட்ஸ் என்ற பெயரில் ஸ்பெஷல் டீம் ஒன்றையும் களமிறக்கியுள்ளார் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.

என்ன பணி?
திமுக ஐடி விங் ரிப்போர்ட்ஸ் குழுவின் பணி என்னவென்றால், யாரெல்லாம் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் திமுக அரசு பற்றியும் அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்களோ அவர்களை ஜெயிலுக்கு அனுப்புவதே ஆகும். ஆம், அண்மையில் கூட விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த நாகராஜ் என்பவர் போலி கணக்கு மூலம் ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் பற்றி பதிவிட்டிருந்தார். சரசரவென்று அந்த அக்கவுண்ட் யாருடையது அவரது பின்னணி என்ன என்பதை ஆராய்ந்த திமுக ஐடி விங் ரிப்போர்ட்ஸ் குழு போலீசுக்கு புகாரை தட்டிவிட்டது.

கைது நடவடிக்கை
இதையடுத்து உடனடியாக அந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஐடி விங் என்றால் சும்மாவா எனக் கேட்கும் அளவுக்கு இப்போது இறங்கி அடிக்க ஆரம்பித்துள்ளார் டி.ஆர்.பி.ராஜா. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''கழகத்தின் மீதும் முதலமைச்சர் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறு, பொய்யான பதிவு போடுபவர்கள் மீது திமுக ஐடி விங் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கென ஐடி விங் ரிப்போர்ட்ஸ் என்ற சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விஷமிகள் மீதான நடவடிக்கை தொடர்கிறது.'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெருச்சாளிகள்
மேலும் தொடர்ந்து பதிவிட்டுள்ள டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., ''சமூக வலைதளங்களில் பொதுவாழ்வில் இருப்போர், குறிப்பாக பெண்கள் மீது மிகவும் கீழ்தரமாக ஆபாசமாக கொச்சையாக வன்மத்தை கக்கிவரும் முகம் காட்டாமல் திரியும் பெருச்சாளிகள் பலர் இருக்கிறார்கள். இனி சிக்குவார்கள்.'' என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications