எலும்பும் சதையும் அழுகி விடும்.. ஆனால் கொள்கை லட்சியம் அழிவதில்லை.. அன்பழகன் வாழ்வார்.. வைரமுத்து
அன்பழகன் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்
சென்னை: "எலும்பும் சதையும் கொண்ட உடல் அழுகிவிடும்... ஆனால், கொள்கை, லட்சியம், வேட்கை ஆகிய தத்துவங்கள் ஒருபோதும் அழிவதில்லை... க.அன்பழகன் தத்துவமாக வாழ்கிறார்... இடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல் அனைத்தும்கொண்ட பெரும் பேச்சாளர் #பேராசிரியர் பேசுவதை நிறுத்தி கொண்டார். இனி எப்போது கேட்போம் அந்த இனமானத் தமிழை?" என்று கவிப்பேரரசு வைரமுத்து
பேராசிரியருக்கு கவிதாஞ்சலி செலுத்தி உள்ளார்.
Recommended Video
கவிஞர் வைரமுத்துவை பொறுத்தவரை பேராசிரியர் மீது ஆழ்ந்த பற்று வைத்திருந்தவர்.. கருணாநிதியை எந்த அளவுக்கு போற்றி உச்சி முகர்ந்தாரோ, அதுபோலவே பேராசிரியர் அன்பழகன் மீதும் மதிப்பு வைத்திருந்தவர்.
அன்பழகன் பொறுப்பில் இருந்போதும்சரி, ஓய்வில் இருந்தபோதும் சரி.. அவரது பிறந்த நாளுக்கு தவறாமல் வாழ்த்து சொல்வது வைரமுத்துவின் பழக்கம். கடந்த முறை அன்பழகனின் 97 வயது முடிந்து 98-வது ஆண்டில் காலடி வைக்கும்போது, தொண்ணூற்று எட்டைத் தொட்டதல்ல வியப்பு; ஒரே கொள்கையில் ஊன்றி நிற்பதே சிறப்பு.பேராசிரியப் பேராசானே!கலைஞர் உள்ளம் வாழ்த்தும். கவிஞர்கள் வணங்குகிறோம்" என்று வாழ்த்து கூறியிருந்தார்.

கதறி அழுதார்
இந்நிலையில் பேராசிரியரின் மரணம் வைரமுத்துவை ரொம்பவே உலுக்கி போட்டது.. அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரும்போதே கதறி வெடித்து அழுதார்..பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து கனத்த இதயத்துடன் சொன்னதாவது:

வெற்றி - தோல்வி
"மறைந்த முதல்வர் கருணாநிதியுடன் 75 ஆண்டுகள் நட்பு பாராட்டியவர் க.அன்பழகன். இப்படிப்பட்ட வாழ்க்கை வேறு எவருக்கும் வாய்த்திருக்காது... க.அன்பழகனின் வாழ்வில் இருந்து இந்த பொது சமூகம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பெரும் பண்பு உண்டு.... தான் ஒரு அமைச்சர் என்று ஒருநாளும் அவர் தன் தலையில் கிரீடத்தை ஏற்றிக்கொண்டதில்லை... தோல்வி வந்தபோது துவண்டதும் கிடையாது.. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகக் கருதும் பக்குவம் கொண்டவர்.

பாடம்
அவருடைய வாழ்க்கையே ஒரு பெரிய செய்திதான்.. அவர் தொட்டது பகுத்தறிவு.. நிறைந்ததும் பகுத்தறிவுதான். அவருடைய தொடக்க புள்ளி இனமானம்... முற்றுப்புள்ளியும் இனமானம்தான்... அவரது வாழ்வே திராவிட இயக்கத்திற்கு ஒரு பெரும் பாடமாக விளங்குகிறது.. திமுகவை விட்டு எங்கும் செல்லாதவர்.. தடம் மாறாதவர் என பலரும் அவரை சொல்வர்... ஆனால் கருணாநிதி ஒருமுறை சொன்னார், தன்னால் ஏற்படுத்தப்பட்ட கட்சியை விட்டு க.அன்பழகன் எங்கே செல்வார் என்றார்.

எலும்பு - சதை
எலும்பும் சதையும் கொண்ட உடல் அழுகிவிடும்... ஆனால், கொள்கை, லட்சியம், வேட்கை ஆகிய தத்துவங்கள் ஒருபோதும் அழிவதில்லை... க.அன்பழகன் தத்துவமாக வாழ்கிறார். அவர் தத்துவமாக வாழ்ந்துகொண்டே தான் இருப்பார்... அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் தனது அரசியல் ஆசானை இழந்து வாடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் தங்கள் பொதுச்செயலாளரை இழந்து வாடும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என வைரமுத்து கவிதாஞ்சலியை தெரிவித்தார்.
|
ட்விட்டர் பதிவு
மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில், "இடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல் அனைத்தும்கொண்ட பெரும் பேச்சாளர் #பேராசிரியர் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இனி எப்போது கேட்போம் அந்த இனமானத் தமிழை?" என்று கேள்விக்குறியுடன் இரங்கல் பதிவை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications