கோவை, மதுரை மெட்ரோ.. மத்திய பாஜக செய்த தவறு.. திமுகவிற்கு லட்டு மாதிரி கிடைத்த சான்ஸ்.. களம் மாறுதே
சென்னை: மத்திய பாஜக அரசு, மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்ட முன்மொழிவுகளை நிராகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் கொள்கையின்படி, இந்த நகரங்கள் குறைந்தபட்ச மக்கள் தொகை தேவையை பூர்த்தி செய்யவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், திமுக இந்த விவகாரத்தை தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு முக்கிய அம்சமாகப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் நிராகரிப்பு இரு நகர மக்களிடையேயும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகராகவும், கோவை ஒரு முக்கியமான தொழில்துறை மற்றும் கல்வி மையமாகவும் திகழ்கின்றன. இரண்டு நகரங்களும் விரைவான வளர்ச்சி, போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறந்த பொது போக்குவரத்துக்கான வளர்ந்து வரும் தேவையை எதிர்கொள்கின்றன.

மெட்ரோ அமைப்பு
மெட்ரோ அமைப்பு போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, நீண்டகால பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்று மாநில அரசு வாதிட்டது. ஆனால், இந்த முன்மொழிவுகள் மக்கள் தொகை விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என மத்திய அரசு பதிலளித்துள்ளது.
மத்திய அரசு தமிழ்நாட்டின் தேவைகளை புறக்கணிப்பதற்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டு என்று திமுக இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு பெரிய நகரங்களின் எதிர்காலத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாக இது பார்க்கப்படுகிறது.
பாஜக ஒப்பந்தம்
பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு, பல சிறிய நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையும் ஒப்பிட்டு பேசவும் திமுக தொடங்கி உள்ளது.
மெட்ரோ அமைக்க கடந்த சில ஆண்டுகளாக கோரி வருவதாகவும், மத்திய அரசின் முடிவு தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றிய புரிதல் இல்லாததைக் காட்டுவதாகவும் திமுக வாக்காளர்களுக்கு வாதம் வைக்கலாம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுடன் மத்திய அரசு ஒத்துழைக்காததற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாக சித்தரிக்கப்படலாம். மத்திய அரசின் அனுமதி இல்லாமலே ஒருவேளை திமுக அரசு இதை செயல்படுத்தினால்.. அது திமுகவிற்கு பெரிய சாதகமாக மாறும் சூழல் உள்ளது.
மெட்ரோ மதுரை கோவை
கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்ட முன்மொழிவுகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கான சான்றுகள் புகைப்படத்தில் இணைக்கப்பட்டு உள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், நவம்பர் 14, 2025 அன்று வெளியிட்ட தகவலில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோவையின் மக்கள் தொகை 15.84 லட்சம் என்றும், மதுரையின் மக்கள் தொகை 15 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பேருந்து பயன்படுத்துங்கள் - விரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு
2017 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் கொள்கையின்படி, ஒரு நகரத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்க, அதன் மக்கள் தொகை 20 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட விரிவான போக்குவரத்து திட்டத்தின்படி, மதுரைக்கு விரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு (BRTS) பொருத்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மெட்ரோ திட்டங்கள் அதிக செலவு கொண்டவை என்பதால், நீண்டகால நிலைத்தன்மை கருதி கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும். இந்த நகரங்களுக்கு, மலிவு விலையிலான மற்ற நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளான வலுவான பேருந்து சேவை மற்றும் BRTS ஆகியவை பொருத்தமானதாக இருக்கும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மேற்கண்ட காரணங்களால், கோவை மெட்ரோ ரயில் திட்ட மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்படுகின்றன," என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு சவால் என்னவென்றால், நிராகரிப்புக்குப் பின்னால் உள்ள தொழில்நுட்ப காரணங்களை விளக்கி, இந்த முடிவு கொள்கை விதிகளின் அடிப்படையிலானது அன்றி அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படவில்லை என்பதை வாக்காளர்களை நம்ப வைப்பதாகும். ஆனால் அதற்கு வாய்ப்பு மிக குறைவு. இது கோவை, மதுரையில் பாஜகவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம்.
தேர்தல் காலம் நெருங்கி வருவதால், மெட்ரோ விவகாரம் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பாஜக அரசின் இந்த தவறு திமுகவிற்கு லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு. குறிப்பாக மதுரை மற்றும் கோயம்புத்தூரில் பொதுமக்களிடையே ஏற்கனவே நிலவும் ஏமாற்றம் காரணமாக இது மேலும் வலுப்பெறலாம். 2026 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை வலுப்படுத்த இதை ஒரு வாய்ப்பாக திமுக வியூகவாதிகள் பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications