எடப்பாடியை சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்தே தீர வேண்டும்... திமுகவின் புதிய சபதம்
சென்னை: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தோற்கடித்தே தீருவது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சபதமேற்றுள்ளார்.
Recommended Video
அண்மைக்காலமாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆக்ரோஷம் காட்டுவதும், கோபப்படுவதும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.வாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெறக் கூடாது என்பதில் திமுக மிக உறுதியாக உள்ளது.
மூன்றாண்டு
கடந்த மூன்றாண்டுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சிலும், நடவடிக்கைகளிலும் மிகுந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சராக பதவியேற்ற போது ஒருவித பதற்றத்துடனும், அச்சத்துடனும் காணப்பட்ட எடப்பாடி பழனிசாமி, இன்று அரசியலில் நின்று விளையாடுகிறார். அந்தளவிற்கு தனது குணநலன்களை மாற்றிக்கொண்ட அவர், செய்தியாளர்கள் சந்திப்பை கூட கூலாக எதிர்கொள்கிறார். மேலும், பல சிக்கலான தருணங்களில் கூட புத்திசாலிதனமாக சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து, கோவை அல்லது சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை பதிவு செய்துவிடுகிறார்.
சட்டமன்றம்
சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் பலமுறை சீற்றம் அடைந்தது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை சட்டம் தொடர்பாக கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமியர்களை திமுக தூண்டிவிடுவதாகவும், இதனால் யாருக்கு பாதிப்பு சொல்லுங்கள் எனவும் ஆவேசம் காட்டினார். இந்நிலையில் நேற்றும் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் முன்னிலையில் மிக கடுமையாக நடந்துகொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. திமுக உறுப்பினர் ஆஸ்டின் தனது பேச்சுக்கு இடையூறு செய்ததால் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் எடப்பாடி.
வாக்குவாதம்
இதுமட்டுமன்றி கடந்த கூட்டத்தொடரிலும் சரி இப்போது நடைபெறும் கூட்டத்தொடரிலும் சரி முதல்வரின் பேச்சில் சற்று சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவது என நேற்றைய தினம் கூட மு.க.ஸ்டாலினுடன் காரசார வாக்குவாதம் நடத்தினார் முதல்வர். மேலும், விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஏன் தோற்றீர்கள் என ஸ்டாலினை பார்த்து நேருக்கு நேராகவே கேட்டார். இப்படி பல விவகாரங்களிலும் முதல்வர் குரலை உயர்த்தி பதில் கொடுப்பது திமுக உறுப்பினர்களை கோபம் கொள்ளச் செய்துள்ளது.
வேட்பாளர்
இதனிடையே வரும் சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெறக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் ஸ்டாலின். அவரை எதிர்த்து திமுக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வகணபதியை களமிறக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தொகுதியான போடியிலும் வலுவான வேட்பாளரை களமிறக்க திமுக முடிவெடுத்துள்ளது.