நீட் ஆய்வு குழுவுக்கு எதிரான கரு. நாகராஜன் வழக்கு.. திமுக கூட்டணி கட்சிகள் இடையீட்டு மனு
சென்னை: நீட் பாதிப்பு ஆய்வுக் குழுவை எதிர்த்த பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென திமுக, மதிமுக, சிபிஐ, திராவிடர் கழகம், பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் இடையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்திருந்தது.
இந்த குழு அமைக்கப்பட்டதற்கு எதிராகத் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.

இடையீட்டு மனு
இந்நிலையில், நீட் பாதிப்பு ஆய்வுக் குழுவை எதிர்த்த பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென திமுக, மதிமுக, சிபிஐ, திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் சார்பிலும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சார்பிலும் இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தள்ளுபடி செய்ய வேண்டும்
அதில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்யாத நிலையிலும், அதில் தமிழ்நாடு அரசு முடிவெடுக்காத நிலையிலும் அந்த குழுவை எதிர்த்த கரு.நாகராஜன் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திக தலைவர் வீரமணி தனது மனுவில், ஏகே ராஜன் குழு அறிக்கை அளிக்கும்பட்சத்தில் அதன் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தெரியாமல், முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

திணிக்கப்படும் நீட்
அதேபோல தமிழ்நாட்டு மக்களின் ஆட்சேபங்கள் மற்றும் சட்டமன்றத்தின் விருப்பத்துக்கு முரணாக நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளதாக பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார். முன்னதாக, கரு நாகராஜன் தொடர்ந்த வழக்கில் மருத்துவத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனின் பதில் மனுவை அரசு தலைமை வழக்கறிஞர்கள் இன்று தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு அரசு பதில்
அதில் நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து பாஜக தொடர்ந்துள்ள வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி என்றும், விளம்பர நோக்கத்திற்காகத் தொடரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வு அரசுப் பள்ளி மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை ஆராய்வதற்கு மட்டுமே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதை உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது எனக் கூற முடியாது எனவும் பதில் மனுவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications