அறிவாலயத்தில் எதிரொலித்த "கோஷம்.." ஜெர்க்கான சுப்புலட்சுமி! கேமராமேன்களை வெளியேற்றி பூட்டப்பட்ட கதவு
சென்னை: அண்ணா அறிவாலயத்திலேயே ஆவேச குரல்கள் எதிரொலித்ததால் திமுக தலைவர்கள் ஷாக்காகிவிட்டனர். தொலைக்காட்சி கேமரா மேன்களை வெளியே அனுப்பி கதவை சாத்தினர்.
இத்தனைக்கும் காரணம் தொகுதி பங்கீட்டில் நிலவும் இழுபறிதான். ஒரு பக்கம், அதிமுக கூட்டணியில் வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியாகிவிட்டது. ஆனால் திமுக தனது தொகுதிகளை இன்னும் வெளியிடவில்லை.
காங்கிரஸ் உட்பட பல கூட்டணி கட்சிகளுடன் நிலவும் இழுபறிதான் இதற்கு காரணம்.

திமுகவினர் கோஷம்
இந்த நிலையில்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்த அறிவாலயம் வந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், எ.வ.வேலு, ஐ.பெரியசாமி ஆகிய பேச்சுவார்த்தை குழுவினருக்கு சொந்தக்கட்சி பிரமுகர்களே அதிர்ச்சியளித்தனர். பொன்னேரி தொகுதியிலிருந்து வந்திருந்த திமுகவினர் அந்த தொகுதியை இ.கம்யூனிஸ்டுக்கு ஒதுக்க கூடாது என கோஷமிட்டனர்.

அண்ணா அறிவாலயம்
அதுவும், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தொண்டர்கள் இப்படி ஆவேசமாக கோரிக்கையை முன்வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பொன்னேரி தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று கோஷம் போட்டனர் அவர்கள். இதனால் அந்த சம்பவங்களை வீடியோவாக எடுக்க டிவி நிருபர்கள் முற்பட்டனர். ஆனால் திமுக நிர்வாகிகள் கோபமடைந்தனர். "வெளியே போங்க.. கதவை பூட்டுங்க.." என கத்தியபடி டிவி கேமரா மேன்களை வெளியே அனுப்பி கதவை சாற்றிவிட்டனர்.

தலைமையகத்தில் போராட்டம்
இதனால் அறிவாலயத்தில் பரபரப்பு நிலவியது. பிற கட்சியினர் தங்களது வேட்பாளர்கள் தொடர்பான அதிருப்தியை தங்கள் தொகுதிகளில் காட்டி போராட்டம் நடத்திவரும் நிலையில், அறிவாலயத்திலேயே திமுகவினர் தர்ணா நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிகள்
இதனிடையே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு, சூலூர், பெருந்துறை, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கான தொகுதியும் இன்று அறிவிக்கப்பட்டது.
மணப்பாறை, பாபநாசம் தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிட உள்ளது.












Click it and Unblock the Notifications