"கள்ள மவுனம்" எடப்பாடி பழனிசாமி.. சிலந்தி ஆறு தடுப்பணை விவகாரம்.. துரைமுருகன் பதிலடி
சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கேரள அரசு தடுப்பணை கட்டுவதை திமுக தடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்த நிலையில் இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் கொடுத்துள்ளார்.
இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாகவும் இந்த அணை கட்டுமானம் நிறைவடைந்தால் அமராவதி அணைக்கு வரும் நீர் நின்றுவிடும் என்றும் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எட்பாடி பழனிசாமி: திங்கள்கிழமை இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கேரள அரசு இந்த தடுப்பணையைக் கட்டிவிட்டால் அமராவதி அணைக்கு வரும் நீர் பாதிக்கப்படும். இதனால் அந்த பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைவார்கள். இதனால் சிலந்தி ஆற்றின் நடுவே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் இதற்குச் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.
துரைமுருகன் பதிலடி: இதற்கிடையே எடப்பாடி பழனிசாமிக்கு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியைக் கள்ள மவுனம் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்துள்ள அவர், தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரள, கர்நாடக அரசுகள் காவிரி வடிநிலத்தில் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைக் கண்காணிக்க வேண்டும் எனக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருக்கிறது!
கள்ள மவுனம்: கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். "கள்ள மவுனம்" எதிர்க்கட்சித் தலைவருக்குக் கைவந்த கலை என்பதைக் காவிரி பிரச்சினையில் மட்டுமல்ல - பல்வேறு அரசியல் பிரச்சினைகள், தேர்தல் கூட்டணியிலும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
அந்த வாசகத்திற்கு மறு உருவம் பழனிசாமிதானே தவிர வேறு யாருமல்ல! காவிரி இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நீர் உரிமையில் 14.75 டி.எம்.சி நீரைக் கள்ள மவுனம் சாதித்துத் தாரை வார்த்தது இதே பழனிசாமிதான் என்பதை இந்த நேரத்தில் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
எதிர்த்து வருகிறோம்: தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை - காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த தீர்ப்பு, உச்சநீதிமன்றம் 16.05.2018 அன்று வழங்கிய இறுதித் தீர்ப்பு ஆகியவற்றுக்கு மாறாக, கர்நாடக மற்றும் கேரள அரசுகள் நடந்துகொள்ள முயற்சிக்கும்போதெல்லாம் அதை அரசியல்ரீதியாக, ஒன்றிய அரசு வாயிலாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்கள் வாயிலாகக் கடுமையாக எதிர்த்து வருகிறது தமிழ்நாடு அரசு என்பதுதான் உண்மை.
அமராவதி ஆற்றின் கிளை நதியான தேனாறு "வட்டவடா" எனக் கேரளாவில் அழைக்கப்படுகிறது. இதைப் பொருத்தவரை - சென்ற 04.04.2024 அன்று நடைபெற்ற 29-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்திலேயே "காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். கண்காணிக்க வேண்டும்" எனத் தமிழ்நாட்டின் உறுப்பினர் மற்றும் அரசு நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருக்கிறார். இதை இனி வரும் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துவார்.
நிலைநாட்டுவோம்: ஆகவே, காவிரி தீர்ப்பினை மீறும் விதமாகக் கேரளாவோ, கர்நாடக அரசோ செயல்பட முயற்சித்தால் அதை உறுதியுடன் எதிர்த்து - தமிழ்நாட்டின் காவிரி உரிமையைச் சட்டரீதியாக மட்டுமல்ல - அனைத்து விதத்திலும் தமிழ்நாடு அரசு நிலைநாட்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications