பிரதமர் மோடி அவர்களுக்கு தைரியம் இருக்கா? நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுக எம்எல்ஏ எழிலன் ஆவேசம்
சென்னை: "கார்ப்பரேட் கோச்சிங் சென்டர்களுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உள்ள கள்ள உறவினால்தான் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என திமுக எம்.எல்.ஏ. எழிலன் குற்றம்சாட்டி உள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் போராட்டத்தில் இவ்வாறு எழிலன் கூறினார்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக மாணவர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர்கள், மாணவரணி நிர்வாகிகள், கல்வியாளர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

திமுக மாணவரணி செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான எழிலரசன் இன்று போராட்டத்தின் போது பேசுகையில், "தமிழ்நாடும், திராவிட முன்னேற்ற கழகமும், நீட் தேர்வால் என்னென்ன பாதிப்பு வரும் என்பதை முன்கூட்டியே சொன்னது. நீட் தேர்வே ஒரு மோசடி தேர்வு.. வெறும் கோச்சிங் மாபியாக்கள் மட்டும் தான் பல கோடி ரூபாய் சம்பாதிப்பார்கள் என்று முன்கூட்டியே சொன்னது, இன்று உண்மையாகி உள்ளது. பங்குச்சந்தையில் கோச்சிங் சென்டர்கள் லிஸ்ட்டில் வந்துள்ளது. இப்படிப்பட்ட கோச்சிங் சென்டர்களை பாதுகாப்பதை தான் தேசிய தேர்வு முகமை செய்கிறது.
கோச்சிங் சென்டர் நடத்துபவர்களுக்கும், கார்ப்பரேட் கோச்சிங் சென்டர் நடத்துபவர்களுக்கும் தேசிய தேர்வு முகமைக்கும் உள்ள கள்ள உறவினால் தான் இன்றைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று நமது தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், மாநில கொள்கையை அரசின் சார்பாக வெளியிட்டார். அந்த மாநில கல்விக் கொள்கையில், தமிழ்நாடு அரசு, திராவிட மாடல் அரசு என்ன சொல்கிறது என்றால், எல்லா தனியார் கோச்சிங் சென்டர்களையும் மூட வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது.
இதை சொல்வதற்கு தேசிய தேர்வு முகமைக்கு தைரியம் உள்ளதா, இதை சொல்வதற்கு பாராளுமன்றத்தில் ஆட்சி செய்யும் பாஜக அமைச்சர்களுக்கு தைரியம் இருக்கா.. பிரதமர் மோடி அவர்களுக்கு தைரியம் இருக்கா.. உங்களுக்கு தைரியம் இருந்தால் எங்களை மாதிரி அனைத்து தனியார் கோச்சிங் கிளாஸ்களையும் தடை செய்வோம் என்று சொல்ல முடியுமா? அப்படி தைரியம் இல்லை என்றால், நேசனல் டெஸ்ட் ஏஜென்சிக்கும், கோடிக்கணக்கில் செலவு செய்து, பயிற்சியை மாணவர்களுக்கு விற்பனையாக்கி, மாணவர்களுக்கு வியாபாரம் ஆக்கிய கோச்சிங் மாபியாக்களுக்கும் உள்ள தொடர்பு தான், இந்த வெளிப்பாடு..
எனவே தோழர்களே நாம் சமூக நீதிக்காக போராடுகிறோம்.. மாநில உரிமைக்காக போராடுகிறோம்.. நீட் சமூக நீதிக்கு எதிரானது.. மாநில உரிமைக்கு எதிரானது.. அதை தொடர்ச்சியாக பேசிக்கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு பல்வேறு மாநிலத்தில் இருக்கும் அனைத்து முதல்வர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.. ஏன் பாஜக கூட்டணியில் இருக்கிற, மகாராஷ்டிராவில் இருக்கும் கட்சி சொல்கிறது.. பீகாரில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள்.. இந்த விவகாரம் தொடர்பாக எல்லாரும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இதற்கு விவாதம் வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டிருக்கிறார்..
நாடாளுமன்றத்தில் எல்லாம் என்ன பேசப்போகிறார்கள் என்றால், சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய திராவிட அல்காரிதம் குறித்து பேசுவார்கள்.. திராவிட அல்காரிதம் தான் இந்தியாவின் அல்காரிதம்.. இந்தியாவின் அல்காரிதம் தான் எல்லா வகையான நுழைவு தேர்வையும் ரத்து செய்யும் போராட்டமாக நாடு முழுக்க செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்காகத்தான், அதற்கான தொடக்க புள்ளியாகவே இன்று போராட்டத்தில் மாநில உரிமைகளை பாதுகாக்க , நீட் விலக்கை பெற , ஜனாதிபதி ஒப்புதல் பெற களம் இறங்கி உள்ளது திமுக மாணவரணி.. அதற்கு தோளோடு தோளாக மருத்துவ அணி என்றும் செயல்படும் " திமுக எம்எல்ஏ எழிழரசன் பேசினார்.












Click it and Unblock the Notifications