திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவமனை புதிய தகவல்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குரோம்பேட்டை ரிலா இன்ஸ்டிடியூட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஜெ. அன்பழகன். திமுகவைச் சேர்ந்த இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடுமையாக மூச்சுத்திணறல் காரணமாக உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் குரோம்பேட்டை பகுதியில் உள்ள ரிலா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ்
அவருக்கு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை நேற்று முன்தினம் காலை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

பிசிஆர் பரிசோதனை
இந்நிலையில் கொரோனாவால் மோகமாக பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. ரிலா இன்ஸ்டிடியூட் மருத்துவமனை தலைமை செயலதிகாரி இளங்குமரன் கலியமூர்த்தி நேற்று மாலை வெளியிட்ட செய்தியில், மூச்சுத்திணறல் பிரச்சனையுடன் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பிசிஆர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

சுவாசத்தில் பிரச்சனை
ஆரம்பத்தில் முகத்தில் பொருத்தக்கூடிய ஆக்சிஜன் வழங்கும் கருவி மூலமாக அவரால் ஆக்சிஜன் சுவாசிக்க முடிந்தது. ஆனால் பிறகு சுவாசத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்

செயற்கை சுவாச தேவை குறைவு
தற்போது அவர் 80% அளவுக்கான ஆக்சிஜன் சப்ளையை வென்டிலேட்டர் மூலமாக பெற்று வருகிறார். கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலையில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. இவ்வாறு ரிலா இன்ஸ்டிடியூட் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. வென்டிலேட்டர் மூலம் 80% ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், 67% மட்டுமே இன்று தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications