ஸ்டாலின் அவசர முடிவுகளை எடுக்கலாம்.. திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்!
சென்னை: சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நிலையான ஆட்சி அமைக்க அவசர முடிவுகளை உடனடியாக எடுக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கி திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களை கைப்பற்றியது. அதில் திமுக தனியாக 59 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 5, விசிக, முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், தேமுதிக 1 இடத்திலும் வெற்றி பெற்றன.

5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், 108 இடங்கள் வென்ற தவெக பக்கம் தாவியது. மேலும் திமுக கூட்டணியில் 2 சீட்கள் வைத்துள்ள திருமாவளவன், தலா 2 இடங்கள் வைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுக்க தவெக முனைப்பு காட்டி வருகிறது.
59 எம்எல்ஏக்களை வைத்துள்ள திமுக எதிர்க்கட்சி இருக்கையில் அமர உள்ளது. இந்நிலையில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து திமுக எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இந்த நெருக்கடியான, சிக்கலான காலகட்டத்தில் அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தத் தீர்மானத்தில், "நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும். இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம்.
அதேவேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு உறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம் ஆகும்.
இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை ஸ்டாலினுக்கு வழங்குவது என இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது" என்று திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications