வரி குறைப்பு: ஒரு பெண்ணிற்கு நாப்கின் முக்கியமா? வைரம் முக்கியமா?.. ராஜ்யசபாவில் திமுக எம்பி கேள்வி
சென்னை: ஒரு பெண்ணிற்கு நாப்கின் முக்கியமா, இல்லை வைரம் முக்கியமா என ராஜ்யசபாவில் திமுக எம்பி அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் விலை குறையவுள்ள பொருட்கள் ஆடைகள், ரத்தினக் கற்கள், வைரங்கள், செல்லுலார், மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ், மொபைல் போன் சார்ஜர்கள், உறைந்த சிப்பிகள், உறைந்த கடம்பா மீன்கள், பெருங்காயம், கோகோ பீன்ஸ், மெத்தில் ஆல்கஹால், பெட்ரோலியப் பொருட்களுக்குத் தேவையான ரசாயனங்கள் ஆகும்.
அது போல் விலை அதிகரிக்கும் பொருட்கள் - குடைகள், கவரிங் நகைகள், ஒலிபெருக்கிகள், ஹெட்ஃபோன்கள், இயர்போன்கள், ஸ்மார்ட் மீட்டர், சூரிய செல்கள், எக்ஸ்ரே இயந்திரங்கள், மின்னணு பொம்மைகளின் பாகங்கள் உள்ளிட்டவை ஆகும். இந்த விலையேற்ற பொருட்களில் மிகவும் விவாத பொருளானது குடைகள்தான்.

குடைகளுக்கு 20 சதவீதம் அதிகம்
வைரத்திற்கு 5 சதவீத வரியை குறைத்துள்ளார்கள். குடைகளுக்கான இறக்குமதி வரி 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வைரத்தை வாங்கும் மக்களை விட குடையை வாங்கும் மக்கள்தான் அதிகம் என்பதால் அதன் வரியை உயர்த்தினால் விலையும் உயருமே என விவாதங்கள் வந்தன.

பட்ஜெட்கூட்டத் தொடர்
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்களவையில் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா பேசுகையில் கிரிப்டோகரன்சி மீது 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது தற்போது சட்டவிரோதமாக உள்ள நிலையில் ஒருவர் வரியை செலுத்தினால் அது சட்டத்துக்குள்பட்டதாகிவிடும் என்பதை போல் இருக்கிறது இந்த வரி உயர்வு.

சட்டம்
அப்படியே சட்டத்துக்குள்பட்டதாக இருந்தாலும் எந்த வித ஒழுங்கு முறை ஆணையமும் இதுவரை அமைக்கப்படவில்லை. எந்த வரியாக இருந்தாலும் அதற்கென ஒரு சட்டம் இருக்க வேண்டும். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு நமது மத்திய அரசு எந்த வித சட்ட திட்டமும் இல்லாமல் கிரிப்டோகரன்சிக்காக வரியை விதித்துள்ளது.

12 சதவீத வரி
நம் நாட்டில் சானிட்டரி நாப்கினுக்கு 12 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் வைரத்திற்கான சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணிற்கு நாப்கின் முக்கியமா அல்லது வைரம் முக்கியமா ? இங்குள்ள பெண் உறுப்பினர்களை கேட்டு பாருங்கள். எத்தனையோ லட்சக்கணக்கான பெண்கள் ஒரு பாக்கெட் நாப்கினை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். தஞ்சாவூர்- புதுக்கோட்டைக்கு ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது.

மாற்றான்தாய்
இது குறித்து இந்த பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடாதது தமிழகத்தின் மீதும் தமிழக மக்களின் மீது மத்திய அரசின் மாற்றான்தாய் மனப்பான்மையை காட்டுவது தெரிகிறது. இந்த பட்ஜெட் மூலம் ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினை திமுகவுக்கு ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்து நன்மைகளை செய்து வருகிறார். அவரை போல் மத்திய அரசும் பெருநிறுவனங்களுக்கு மட்டும் நன்மை செய்யாமல் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications